search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருச்சுழி அருகே டிரைவர் மர்ம மரணம்- மனைவியிடம் போலீசார் விசாரணை
    X

    டிரைவரின் உடல் வீட்டிலிருந்து ஆம்புலன்சு வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட காட்சி.

    திருச்சுழி அருகே டிரைவர் மர்ம மரணம்- மனைவியிடம் போலீசார் விசாரணை

    • குழந்தை இல்லாத விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.
    • மனைவி சென்றதில் இருந்து திருக்கண்ணன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.

    திருச்சுழி:

    விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள ஆலடிபட்டி மேலத்தெருவை சேர்ந்தவர் திருக்கண்ணன் (வயது36). இவர் அங்குள்ள கல்குவாரி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    திருக்கண்ணனுக்கும், கமுதி அருகே உள்ள கோவிலாங்குளம் பகுதியை சேர்ந்த அழகியவள்ளி என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஆனால் அவர்களுக்கு இதுவரை குழந்தை இல்லை.

    குழந்தை இல்லாத விவகாரம் தொடர்பாக கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. அதே நேரத்தில் திருக்கண்ணன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார். இதனால் அவர் தினமும் மதுகுடித்தப்படி இருந்துள்ளார்.

    கடந்த 25-ந்தேதியும் மதுகுடித்து விட்டு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து அழகிய வள்ளி கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறி, கமுதி கோவிலாங்குளம் பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    மனைவி சென்றதில் இருந்து திருக்கண்ணன் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் நேற்று மாலை அவரது வீட்டிற்கு அருகே சென்றனர். அங்கு வீட்டுக்குள் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது.

    இதுகுறித்து திருச்சுழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் திருக்கண்ணன் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அங்கு அவர் பிணமாக கிடந்தார்.

    அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. இதனால் அவர் இறந்து 3 நாட்களாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திருக்கண்ணன் எப்படி இறந்தார்? என்பது மர்மமாக உள்ளது. ஆனால் அவரது உடலில் தலை உள்ளிட்ட இடங்களில் காயம் இருந்துள்ளது. இதனால் அவர் குடிபோதையில் தவறி விழுந்ததில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

    இதையடுத்து திருக்கண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிவில் அவர் எப்படி இறந்தார்? என்பது தெரியவரும்.

    இந்த நிலையில் திருக்கண்ணனின் வீட்டிற்கு அருகே இருந்தவர்களிடம் விசாரித்த போது, கடந்த 25-ந் தேதி திருக்கண்ணன் மற்றும் அவரது மனைவிக்கிடையே தகராறு நடந்த விவரத்தை தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும், அதில் திருக்கண்ணனை அவரது மனைவி அழகியவள்ளி தாக்கியதில் இறந்திருக்கலாம் எனவும் போலீசார் கருதுகின்றனர்.

    அது தொடர்பாக திருக்கண்ணனின் மனைவி அழகியவள்ளியிடம் போலீசார் தொடர்ந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். டிரைவர் மர்மமாக இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×