search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுப்புலட்சுமி ஜெகதீசன் விவகாரத்தில் நடந்தது என்ன?
    X

    சுப்புலட்சுமி ஜெகதீசன் விவகாரத்தில் நடந்தது என்ன?

    • கடந்த 15 நாட்களுக்கு முன்பே சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது ராஜினமா கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது.
    • தேர்தலில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கட்சி நிர்வாகிகள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.

    ஈரோடு:

    தி.மு.க. மாநில துணைப்பொதுச்செயலாளராக சுப்புலட்சுமி ஜெகதீசன் நீண்ட காலமாக பதவி வகித்து வருகிறார். இவர் முன்னாள் மத்திய மந்திரியாகவும் பதவி வகித்தார்.

    சுப்புலட்சுமி ஜெகதீசன் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இவர் தான் தேர்தலில் போட்டியிட போவதில்லை என்றும் இளைஞர்களுக்கு வழி விடுவதாகவும் அறிவித்தார்.

    இதற்கிடையே கடந்த சட்டமன்ற தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட ஏராளமான தி.மு.க.வினர் வேட்பு மனுத்தாக்கல் செய்து இருந்தனர். அவர்கள் மாவட்ட செயலாளர் மற்றும் கட்சித்தலைமை மூலம் ஷீட் வாங்க கடுமையாக போராடினர்.

    இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் மொடக்குறிச்சி தொகுதி வேட்பாளராக சுப்புஜெகதீசன் அறிவிக்கப்பட்டார். இதனால் கட்சி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை அதிர்ச்சி அடைந்தனர். எந்த ஒரு கட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் உள்ளூர் நிர்வாகிகளையும் சந்திக்காமல் இந்தார். சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஷீட் கொடுத்ததால் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர்.

    தேர்தலின் போது சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு எதிராக மொடக்குறிச்சி தொகுதியில் உள்ள 2 ஒன்றிய செயலாளர்கள் செயல்பட்டதாக பரபரப்பு புகார் தெரிவிக்கப்பட்டது. இதே போல் கட்சி நிர்வாகிகளும் தங்களை அரவணைத்து தேர்தல் பணியாற்றவில்லை என்று சுப்புலட்சுமி ஜெகதீசன் மீதும் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.

    தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் பா.ஜனதா வேட்பாளர் சரஸ்வதியிடம் 206 ஓட்டுகள் வித்யாசத்தில் தோல்வி அடைந்தார். கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்காததால் தோல்வியை தழுவியதாக மீண்டும் புகார் தெரிவித்தார்.

    இது குறித்து 2 ஒன்றிய செயலாளர்கள் மற்றும் ஒரு முக்கிய நிர்வாகி மீது கட்சி தலைமையிடம் புகார் செய்தார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதற்கிடையே சமீபத்தில் நடந்த உட்கட்சி தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசன் புகார் செய்த 2 ஒன்றிய செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கியதால் அதிர்ச்சி அடைந்தார். கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்தும் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார். இந்த நிலையில் தான் விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க. முப்பெரும் விழாவில் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார். மேலும் தனக்கு கட்சியில் எந்த அங்கீகாரமும் இல்லை என்று முடிவு செய்து தலைமைக்கு ராஜினமா கடிதம் அனுப்பியதாக கூறப்படுகிறது.

    கடந்த 15 நாட்களுக்கு முன்பே சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது ராஜினமா கடிதத்தை அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளம் மூலம் வெளியானதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே சுப்புலட்சுமி விவகாரத்தில் என்ன நடந்தது என்று அவரது ஆதரவாளர்கள் கூறியதாவது:-

    தேர்தலில் போட்டியிட்ட சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு கட்சி நிர்வாகிகள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை.

    தேர்தல் பிரசாரம், வாக்கு சேகரிப்பு போன்றவற்றில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை. ஆனாலும் ஓட்டு எண்ணிக்கையில் சுப்புலட்சுமி ஜெகதீசனே முன்னிலையில் இருந்து வந்தார். ஆனால் தபால் ஓட்டில் தி.மு.க.வுக்கு விழுந்த ஓட்டுகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டதால் குறைந்த ஓட்டில் சுப்புலட்சுமி வெற்றி வாய்ப்பை இழந்தார்.

    அப்போது தி.மு.க.வுக்கு விழுந்த தபால் ஓட்டுகள் செல்லாது என்று தேர்தல் அதிகாரிகள் அறிவித்ததற்கு சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு ஆதரவாக நிர்வாகிகள் யாரும் குரல் கொடுக்கவில்லை. அப்போதே அவர் மனம் உடைந்து விட்டார். தேர்தல் தோல்விக்கு பின்பும் ஈரோடு மாவட்டத்தில் நடைபெறும் எந்த ஒரு கட்சி நிகழ்ச்சிகளுக்கும் சுப்புலட்சுமி ஜெகதீசனை அழைப்பதில்லை. தொடர்ந்து அவரை புறக்கணித்து வந்தனர். ஆனாலும் கடந்த மாதம் முதல்-அமைச்சர் கலந்து கொண்ட 2 நிகழ்ச்சிகளிலும் சுப்புலட்சுமி ஜெகதீசன் கலந்து கொண்டார்.

    தன் தேர்தல் தோல்விக்கு காரணமான 2 ஒன்றியச் செயலாளர்களுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டதாலும், தனது ஆதரவாளர்களுக்கு எந்த பதவியும் கிடைக்காததால் அதிர்ச்சி அடைந்தார். மாநில நிர்வாகியான சுப்புலட்சுமி ஜெகதீசனை கண்டு கொள்ளவில்லை.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே சுப்புலட்சுமி ஜெகதீசனின் ஆதரவாளர்களாக இருந்த நிர்வாகி கூறியதாவது:-

    சுப்புலட்சுமி ஜெகதீசனின் ஆதரவாளராக இருந்து வந்த நான் அவருக்காக தேர்தல் பணியில் ஈடுபட்டு பணியாற்றினேன். இந்த நிலையில் கட்சி தலைமை மீது அவரது கணவர் ஜெகதீசன் முகநூலில் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தொடர்ந்து பதிவேற்றி வந்தார்.

    கட்சி பொறுப்பில் இருந்து கொண்டு கட்சியை விமர்சிக்கும் அவரது கணவருக்கு சுப்புலட்சுமி எதிர்பு தெரிவிக்கவில்லை. இதனால் நான் உள்பட ஏராளமான ஆதரவாளர்கள் சுப்புலட்சுமியிடம் இருந்து விலகி வந்து விட்டோம். பேசி தீர்க்க வேண்டிய உட்கட்சி பிரச்சனையை தேர்தல் தோல்வியை மையமாக வைத்து அவரது கணவர் முகநூலில் விமர்சித்ததால் அவரது ஆதரவாளர்களே எதிர்பாளர்களாக மாறி விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×