என் மலர்
உள்ளூர் செய்திகள்

பவானி முகாமில் தங்கி இருந்த பெண்ணிடம் போனில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
- இதனால் இந்த பகுதியை சேர்ந்த 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு:
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றுக்கு உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாபேட்டை, பவானி, கருங்கல்பாளையம் காவிரிக்கரை, கொடுமுடி போன்ற பகுதியில் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் இந்த பகுதியை சேர்ந்த 369 குடும்பங்களைச் சேர்ந்த 1,277 பேர் 14 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பவானி பகுதி மக்கள் காவிரி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பவானி கந்தன் நகர், காவிரி நகர், பாலா கேஸ் குடோன் பகுதியைச் சேர்ந்தவர்கள் என 60 குடும்பங்களை சேர்ந்த 70 ஆண்கள், 69 பெண்கள், 34 சிறுவர்கள் என மொத்தம் 173 பேர் கந்தன் பட்டறை பகுதியில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான உதவிகளை தாசில்தார் சரவணன் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அந்த முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி சென்று இருந்தார். அப்போது சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களிடம் வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கலெக்டர் கிருஷ்ணனுண்ணி செல்போன் மூலம் பவானி கந்தன் பட்டறை பகுதி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள ஜெயசுதா என்ற பெண்ணிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். அப்போது அந்த பெண்ணிடம் முகாமில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கேட்டிருந்தார். மேலும் உங்களுக்கு என்ன வசதிகள் செய்ய வேண்டுமோ அதை கலெக்டர் இடம் கூறுங்கள் அவர் செய்து கொடுப்பார் என்று கூறினார். முதல்-அமைச்சர் தன்னிடம் செல்போனில் பேசியதால் அந்தப் பெண் மகிழ்ச்சி அடைந்தார்.






