search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புரட்டாசி மாதம் பிறப்பு எதிரொலி- கறிக்கோழி விற்பனை பாதியாக சரிவு
    X

    புரட்டாசி மாதம் பிறப்பு எதிரொலி- கறிக்கோழி விற்பனை பாதியாக சரிவு

    • கறிக்கோழி விலை குறைந்துள்ள நிலையில் அதிக அளவில் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது.
    • இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இதே போல தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 25 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    குறிப்பாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மா நிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் (பிசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர். இதனால் ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பாதியாக சரிந்துள்ளது. இதனால் கறிக்கோழி விலை சரிய தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி கடந்த வாரம் பண்ணைகொள்முதல் விலை 130 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ஒரு கிலோவுக்கு 26 ரூபாய் குறைந்து 104 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 4.50-க்கு விற்ற ஒரு முட்டைவிலை படிப்படியாக குறைந்து தற்போது 4.30 ஆக குறைந்துள்ளது. முட்டைகள் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதன் விலை பெருமளவில் குறையவில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

    கறிக்கோழி விலை குறைந்துள்ள நிலையில் அதிக அளவில் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    Next Story
    ×