search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ணைக்காடு அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை
    X

    பண்ணைக்காடு அருகே கல்லால் தாக்கி தொழிலாளி படுகொலை

    • கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

    பெரும்பாறை:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் லோகேஷ்வரன் (வயது 22). கூலித்தொழிலாளி. இவர். திண்டுக்கல் மாவட்டம் பண்ணைக்காடு அருகே மூலையாறு பகுதியில் உள்ள தார் சுடுகலவை மையத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார்.

    லோகேஷ்வரனுடன் அந்த மையத்தில் உசிலம்பட்டி அருகே உள்ள மாதரை கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் உள்பட 5 பேர் அங்கு பணியில் இருந்தனர். சம்பவத்தன்று வேலை செய்து கொண்டிருந்த போது லோகேஷ்வரனுக்கும், 17 வயது சிறுவனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதன்பிறகு பணி முடிந்து அனைவரும் தங்கும் அறைக்கு சென்று விட்டனர். நள்ளிரவில் அனைவரும் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.

    அப்போது எழுந்த சிறுவன் தன்னிடம் தகராறு செய்த லோகேஷ்வரனின் வயிற்றில் அங்கு கிடந்த கூர்மையான கருங்கல்லை எடுத்து குத்திவிட்டு தப்பி ஓடி விட்டார். இதனையடுத்து வலி தாங்க முடியாமல் லோகேஷ்வரன் அலறினார். அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் எழுந்தனர். பின்னர் அவர்கள் லோகேஷ்வரனை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி லோகேஷ்வரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து லோகேஷ்வரனின் உறவினர்கள் தேனி அரசு ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். கொலையாளியை கைது செய்யும் வரை உடலை வாங்கமாட்டோம் என அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகேஸ்வரனை கல்லால் குத்திய 17 வயது சிறுவனை கைது செய்தனர். அதன் பின்பு உறவினர்கள் உடலை பெற்றுச் சென்றனர்.

    Next Story
    ×