search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம் முழுவதும் தீவிர வேட்டை- முக கவசம் அணியாத 3 ஆயிரம் பேர் சிக்கினர்
    X

    தமிழகம் முழுவதும் தீவிர வேட்டை- முக கவசம் அணியாத 3 ஆயிரம் பேர் சிக்கினர்

    • கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எனவே பொதுமக்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
    • இதற்கிடையே சென்னையிலும் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதையொட்டி தமிழக அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    பொது இடங்களில் கூடும்போது அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். இதனை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    இதன்படி தமிழகம் முழுவதும் முக கவசம் அணியாதவர்களுக்கு மீண்டும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி துறை மற்றும் போலீசார் இணைந்து அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த தீவிர வேட்டையால் பொது இடங்களில் மாஸ்க் அணியும் பழக்கம் மீண்டும் அதிகரிக்கத்தொடங்கி உள்ளது. அதேநேரத்தில் மாஸ்க் அணியாதவர்களிடம் ரூ.500 அபராதம் விதிக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    இதன்படி தமிழக முழுவதும் ஒரேநாளில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் அபராதம் விதிக்கும் நடவடிக்கை மேலும் தீவிரப்படுத்தப்படும் என்றும் எனவே பொதுமக்கள் தவறாமல் மாஸ்க் அணிய வேண்டும் என்றும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    இதற்கிடையே சென்னையிலும் மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை அதிகாரிகள் தீவிரப்படுத்தி இருக்கிறார்கள். இதன்படி நேற்று ஒரேநாளில் மாஸ்க் அணியாத 121 பேரிடம் அபராதமாக ரூ.60 ஆயிரத்து 500 வசூல் செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு முக கவசம் அணியாத நபர்களிடம் இருந்து ரூ.500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணியாத 121 நபர்களிடம் இருந்து ரூ.60,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

    திருவொற்றியூர் மண்டலத்தில் ரூ.2 ஆயிரம், மணலியில் ரூ.3 ஆயிரம், மாதவரத்தில் ரூ.2 ஆயிரம், தண்டையார்பேட்டையில் ரூ.9 ஆயிரத்து 500, ராயபுரத்தில் ரூ.6 ஆயிரத்து 500, திரு.வி.க.நகரில் ரூ. ஆயிரத்து 500, அம்பத்தூரில் ரூ.4 ஆயிரத்து 500, அண்ணாநகரில் ரூ.4 ஆயிரம்,

    தேனாம்பேட்டையில் ரூ.3 ஆயிரம், கோடம்பாக்கத்தில் ரூ.9 ஆயிரத்து 500, வளசரவாக்கத்தில் ரூ.3 ஆயிரம், ஆலந்தூரில் ரூ.2 ஆயிரம், அடையாரில் ரூ.7 ஆயிரம், பெருங்குடியில் ரூ.1000, சோழிங்கநல்லூரில் ரூ2 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

    மாஸ்க் அணியாதவர்களிடம் அபராதம் விதிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து சென்னை மாநகரங்களில் முக கவசம் அணியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தடுக்கப்படும்.

    சென்னையில் கோவில்களில் மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதன்படி மாஸ்க் அணிந்து மக்கள் செல்லத் தொடங்கி உள்ளனர்.

    கோவில்களில் நுழையும் போது மாஸ்க் அணிந்து செல்லுங்கள் என்று அங்குள்ள பணியாளர்கள் கூறியதும் பையில் இருக்கும் மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டு மக்கள் உள்ளே செல்கிறார்கள். இதேபோன்று திருமணம் போன்ற விழாக்களிலும் கடந்த சில நாட்களில் முக கவசம் அணியும் பழக்கம் அதிகரித்துள்ளது.

    Next Story
    ×