search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேலூர் அருகே ஓரின சேர்க்கைக்கு மறுத்தவர் படுகொலை- 2 வாலிபர்கள் கைது
    X

    மேலூர் அருகே ஓரின சேர்க்கைக்கு மறுத்தவர் படுகொலை- 2 வாலிபர்கள் கைது

    • ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே வண்ணாம்பாறைபட்டி பகுதியில் கோவில் அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் பிணமாக கிடப்பதை அந்த வழியாக சென்றவர்கள் இன்று பார்த்தனர்.

    இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சாந்தி மற்றும் போலீசார் சென்றனர். அங்கு தண்ணீர் தொட்டியில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த வாலிபர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட அந்த நபர் யார்? அவரை கொன்றவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபரை நேற்று முன்தினம் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதை பார்த்ததாக சிலர் போலீசில் தெரிவித்தனர். இதையடுத்து அந்த வாலிபர்கள் யார்? என்று விசாரிக்கப்பட்டது.

    அப்போது அவர்கள் வண்ணாம்பாறைபட்டியை சேர்ந்த ராமன் என்பவரின் மகள் பசுபதி (வயது19), நடுவளவு பகுதியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் பெருமாள் (22) என்பது தெரியவந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

    அப்போது தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்த வாலிபரை கொன்றது தாங்கள் தான் என்றும், அந்த நபர் நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் (35) எனவும் கூறியுள்ளனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் வாலிபர் கொலை குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

    பசுபதி மற்றும் பெருமாள் ஆகிய 2 பேரும் கடந்த 13-ந் தேதி காலை மேலூர் அருகே உள்ள மலம்பட்டி அரசு மதுக்கடையில் மதுபானம் வாங்கி குடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அப்போது வண்ணாம்பாறைபட்டி பிள்ளையார் கோவில் அருகே ராஜ்குமார் உட்கார்ந்திருந்தார்.

    குடிபோதையில் இருந்த பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை ஓரின சேர்க்கைக்கு அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர்கள் ராஜ்குமாரை உருட்டுக்கட்டையால் அடித்து நிர்வாணப்படுத்தி தங்களின் ஆசைக்கு இணங்க வைக்க முயன்றுள்ளனர்.

    ஆனால் அவர்கள் இருவரையும் தள்ளி விட்டு தப்பி ஓடி முயன்றுள்ளார். இதையடுத்து பசுபதி, பெருமாள் ஆகிய இருவரும் ராஜ்குமாரை பீர்பாட்டிலால் சரமாரி குத்தி உள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    பின்பு ராஜ்குமாரின் உடலை கோவில் அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டு பசுபதி மற்றும் பெருமாள் அங்கிருந்து சென்று விட்டனர். ராஜ்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 2 நாட்களாக யாருக்கும் தெரியவில்லை.

    அவர் கொலை செய்யப்பட்டு தண்ணீர் தொட்டியில் கிடந்தது இன்று காலையில் தான் தெரியவந்தது. அதன்பிறகு போலீசார் நடத்திய விசாரணையில், கொலையாளிகளை போலீசார் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.

    நெல்லையை சேர்ந்த ராஜ்குமார் மேலூர் பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றி திரிந்து பிச்சை எடுத்து வந்துள்ளார். அவரை பிச்சைக்காரர் என்று கூட பார்க்காமல் கொலையாளிகள் இருவரும் குடிபோதையில் ஓரின சேர்க்கைக்கு முயன்று, அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தால் கொலை செய்துள்ளனர்.

    ஓரின சேர்க்கைக்கு மறுத்த பிச்சைக்காரரை வாலிபர்கள் கொலை செய்த சம்பவம் மேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×