என் மலர்
உள்ளூர் செய்திகள்

முதுமலையில் ஆதிவாசி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தம்
- மாதந்தோறும் சம்பளம் மிக தாமதமாக வழங்குவதாக கூறப்படுகிறது.
- உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் சூழல் மேம்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 35-க்கும் மேற்பட்ட ஆதிவாசி ஊழியர்கள், வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள உணவகம், விடுதிகளில் பணியாற்றி வருகின்றனர்.
இவர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் மிக தாமதமாக வழங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாத சம்பளம் இதுவரை வழங்கவில்லை என ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆதிவாசி ஊழியர்கள், வனத்துறையினரிடம் முறையிட்டனர்.
ஆனால் அப்போதும், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஆதிவாசி ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தெப்பக்காடு பகுதியில் உள்ள உணவகத்தை மூடினர். இதனிடையே கர்நாடகம், கேரளா உள்பட வெளிமாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் உணவகம் மூடி கிடப்பதை கண்டு ஏமாற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து ஆதிவாசி ஊழியர்கள் கூறும்போது, மாதம் ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அந்த சம்பளமும் மிகவும் தாமதமாகே வழங்கப்படுகிறது.
இதனால் எங்களால் குடும்பத்தை நிர்வகிக்க முடியாத நிலை உள்ளது. எனவே உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே போராட்டம் நடத்துவதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஊழியர்களின் போராட்டத்தை அடுத்து மாலையில், ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஊழியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு, வழக்கம் போல தங்கள் பணியில் ஈடுபட சென்றனர்.






