என் மலர்
உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
பசுமை தமிழ்நாடு தினத்தையொட்டி திண்டுக்கல்லில் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி
- பசுமை தமிழ்நாடு தினத்தினை முன்னிட்டு மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி தொடங்கி வைத்தார்.
- வனத்துறை சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
திண்டுக்கல்:
பசுமை தமிழ்நாடு தினத்தினை முன்னிட்டு மாணவ- மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட கலெக்டர் பூங்கொடி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலக வளாகத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்து மரக்கன்றுகள் வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.
இதில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
முதல்-அமைச்சர் வழிகாட்டுதலின்படி தமிழகத்தின் பசுமைப் பரப்பினை அடுத்த 10 ஆண்டுகளில் 23.69 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் பொருட்டு பசுமை தமிழ்நாடு இயக்கம் உருவாக்கப்பட்டது. கடந்த 24.09.2022 அன்று பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கியது. ஓராண்டு நிறைவடைவதையொட்டி தமிழகம் முழுவதும் இன்று பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது.
அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் துறை வாரியாக மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. வனத்துறை சார்பில் 2,500 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பசுமை தமிழ்நாடு தினம் கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மரங்கள் வளர்ப்பும், அதன் பயன் குறித்தும் பொதுமக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
மேலும் வனத்துறை மூலம் பசுமை தமிழ்நாடு இயக்க திட்டம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான தமிழ்நாடு உயிர்ப்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்குதல் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்கள், பூங்காக்கள், அரசு அலுவலகங்கள், சாலையோர பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள், தனியார் நிலங்கள், குளக்கரைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்கள், மாநகராட்சி, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், பேரூராட்சி மற்றும் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் இலவசமாக நடவு செய்ய வழங்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் மரக்கன்றுகளை பெற தங்களது ஆதார் அட்டை நகல், பட்டா அல்லது சிட்டா நகல், 2 புகைப்படம் கொண்டு வந்து இலவசமாக மரக்கன்றுகள் நடவு செய்து பயன்பெறலாம் என தெரிவித்தார்.
திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் முகாம் அலுவலகத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்று பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. பேரணியில் திண்டுக்கல் உதவி வனப்பாதுகாவலர் ஸ்ரீநிவாசன், மாணவ- மாணவிகள், தன்னார்வலர்கள், விவசாயிகள், தொண்டு நிறுவனங்கள், வனத்துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






