என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர், நந்தி பொருமாள், எல்லையம்மன் கோவிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், நந்தி பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி.
பரமத்தி வேலூர் சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
- சனி பிரதோஷத்தை முன்னிட்டு பரமத்தி வேலூர் சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
- 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பரமத்திவேலூர், அக் 23-
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம் பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு ஐப்பசி மாத சனி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தானம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், தேன், விபூதி உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் ரிஷப வாகனத்தில் கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், பரமத்தி வேலூர் அருகே பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஷ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பரமத்தி வேலூர் எல்லையம்மன் கோயிலில் உள்ள ஏகாம்பரேஸ்வரர், வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், பிலிக்கல் பாளையம் அருகே கரட்டூர் விஜயகிரி பழனியாண்டவர் கோவிலில் உள்ள சிவன் கோவில் மற்றும் வடகரை யாத்தூர், ஜேடர்பாளையம், பரமத்தி வேலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள சிவன் கோயில்களில் சிவபெருமானுக்கும், நந்திகேஸ்வரருக்கும் சனி மஹா பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபி ஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.






