search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பா.ஜ.க. பொதுக்கூட்டம்
    X

    பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.

    பா.ஜ.க. பொதுக்கூட்டம்

    • சிவகங்கையில் நடந்த பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
    • ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை அரண்மனைவாசல் முன்பு உள்ள சண்முகராஜா கலையரங்கத்தில் மாவட்ட பா.ஜ.க சார்பில் மத்திய பா.ஜ.க ஆட்சியின் 8 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடந்தது.

    மூத்த தலைவர் எச்.ராஜா, சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்- மாநில உள்ளாட்சி மேம்பாட்டு தலைவர் சித.பழனிச்சாமி, நகரத்தலைவர் உதயா, மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ராஜகோபால், உள்ளாட்சி மேம்பாட்டு தலைவர் பாண்டித்துரை, ரஞ்சித்குமார் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.

    இதில் மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

    மத்திய அரசு ரூ.42-க்கு அரிசி வழங்குகிறது. ஆனால் ரூ.2-ஐ கொடுத்துவிட்டு அதில் கருணாநிதி ஸ்டிக்கரை ஒட்டி மாநில அரசு வழங்கி வருகிறது. இதன் மூலம் ஏழை பங்காளனாக தி.மு.க. அரசு கபட நாடகமாடிவருகிறது.

    ரேசன் கடைகளில் கொடுக்கப்பட்ட பொங்கல் பொருட்களில் ஏகப்பட்ட ஊழல் நடந்துள்ளது. அந்த ஊழலில் சம்பந்தப்படாத அமைச்சர்களே இல்லை. இது குறித்து கருத்து தெரிவித்த முதல்வர், சிறிய தவறு நடந்துவிட்டதாகவும் அந்த பொருட்களை வழங்கிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார். ஆனால் ஒரு நிறுவனங்கள் கூட இன்று வரை கருப்பு பட்டியலில் வைக்கப்படவில்லை.

    கடந்த ஜெயலலிதா ஆட்சியில் இருந்து அம்மா பெட்டகம் அறிவித்து அதில் 8 பொருட்களில் ஒன்றாக ஊட்டச்சத்து மாவு கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த ஊட்டச்சத்து மாவை பொங்கல் தொகுப்பு வழங்கிய நிறுவனம்தான் கடந்த ஆண்டு 24 லட்சம் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து மாவை வழங்கியுள்ளது.

    பொங்கல் தொகுப்பே தரமில்லாமல் வழங்கப்பட்ட நிலையில் அதே நிறுவனம் இந்த ஊட்டச்சத்து மாவை வழங்கினால் தாயும் குழந்தையும் எவ்வாறு நலமாக இருக்க முடியும் ? ஒரே, ஒரு நாள் ஊழல் இல்லாத அரசை தமிழகத்தில் நடத்தி காட்டுங்கள்? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுக்கிறேன். ஆனால் அவர்களால் அது முடியாது.

    சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் தொகுதிக்கான நலத்திட்டத்தில் பங்கேற்று செய்திகளில் வருவதை காட்டிலும், தினமும் முறைகேடு வழக்குகளுக்காக வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×