search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவன் கொலை: குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற வந்த எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

    • தமிழக அரசு சார்பில் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என குடும்பத்தினர் வலியுறுத்தினர்
    • ஒரு மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் ஆரணி-பாலவாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம்,ஆரணி அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆரணி சுப்பிரமணிய நகர் பகுதியை சேர்ந்த பாஸ்கரன் என்பவரது மகன் தமிழ்ச்செல்வன் 9-ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், இதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் மதுரவாசல் கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்ற மாணவன் வியாழக்கிழமை மதியம் தமிழ்ச்செல்வனை அடித்ததில் மயங்கி விழுந்தான். பின்னர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்து போனான்.

    இந்நிலையில், சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை முடிந்து தமிழ்ச்செல்வன் உடல் சுப்பிரமணிய நகரில் உள்ள அவனது வீட்டுக்கு இன்று மாலை கொண்டு வந்து வைத்திருந்தனர். அவனது உடலுக்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு அவனது குடும்பத்துக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். இதன் பின்னர், பொன்னேரி தொகுதி காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர், ஆரணி பேரூராட்சி மன்றத்துணைத் தலைவர் வழக்கறிஞர் சுகுமார் மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் வந்து தமிழ்ச்செல்வன் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், அவனது குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்.

    இதன்பின், புறப்பட்டு சென்ற சட்டமன்ற உறுப்பினரை தமிழ்செல்வனின் குடும்பத்தினர் மற்றும் சுப்ரமணிய நகர் பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இறந்த மாணவனின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மாணவன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இப்பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தால் ஆரணி-பாலவாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் உறுதி கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இப்பிரச்சனையால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பதட்டமும், பரபரப்பும் நிலவியது.

    Next Story
    ×