search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாநகராட்சி கூட்டத்தில்தி.மு.க. -அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்குவாதம்

    • சேலம் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது.
    • மாநகராட்சி வரி வசூலில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. இதனால் ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் கூட்ட அரங்கில் நடந்தது. ஆணையாளர் பொறுப்பு அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முறைகேடு

    கூட்டத்தில் கவுன்சிலர் இமயவர்மன் பேசுகையில், ஆண்டிப்பட்டி ஏரி புணரமைப்புக்கு ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால் எந்த பணியும் செய்யாமல் மேலும் ரூ.5 கோடி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் பல கோடி ரூபாய் முறை கேடு நடந்துள்ளது. மாநகராட்சி வரி வசூலில் பல கோடி முறைகேடு நடந்துள்ளது. இதனால் ரூ.200 கோடி வரி இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் யாதவமூர்த்தி பேசுகையில்,

    சேலம் புதிய பஸ் நிலையத்தில் நடைபாதையில் பல கடைகள் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் அங்குள்ள பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிக்க முடியாத அளவுக்கு ஆக்கிரமிப்புகள் உள்ளன. அதனை அகற்றி பயணிகள் எளிதாக சென்று வர நடவடிக்கை எடுக்க வேண்டும், பழைய பஸ் நிலையத்தில் கழிவறை கட்டணம் தனியாருக்கு செல்வதாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், அண்ணா பூங்கா டெண்டர் முடிந்தும் மறு ஏலம் விடாதது ஏன், இவ்வாறு அவர் பேசினார்.

    கவுன்சிலர் கே.சி. செல்வராஜ் பேசுகையில், எனது வார்டில் பிரசவ வார்டுடன் உள்ள ஆஸ்பத்திரியை 30 படுக்கைகளுடன் விரிவு படுத்த வேண்டும் என்றார்.

    கவுன்சிலர் ஈசன் இளங்கோ பேசுகையில், தமிழக முதல்வர் அனைவரும் நலனுடன் வாழ வேண்டும் என்பதில் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் தமிழகத்தில் சேலம் மாநகரில் அதிக அளவில் நகர்புற துணை சுகாதார நிலையங்கள் அமைக்க உத்தரவிட்டுள்ளார் அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

    கவுன்சிலர் ஆனைவரதன் பேசுகையில், கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கவுன்சிலர்களுக்கு முறையான அழைப்பிதழ் வழங்கவில்லை. கவுன்சிலர்களுக்கு முறையாக மரியாதை வழங்கப்பட வில்லை என்றார்.

    தொடர்ந்து பேசிய கவுன்சிலர் சரவணன், தமிழ்நாடே வியக்கும் அளவிற்கு கோட்டை மாரியம்மன் கோவில் பணி விரைவாக முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் வேண்டும் என்றே சிலர் குறை கூறுகிறார்கள் என்றார்.

    அதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சி தலைவர் யாதவ மூர்த்தி, கவுன்சிலர் சரவணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தி.மு.க., அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளி நடப்பு செய்தனர்.

    பின்னர் யாதவமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது- கோட்டை மாரியம்மன் கோவில் புணரமைப்பு பணி அ.தி.முக. ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது. நான்கரை ஆண்டுகள் பணி முடிந்த நிலையில் தற்போது ஒன்றரை ஆண்டுகளில் மீதம் இருந்த பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. எதிர்கட்சி உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்படவில்லை. வ.உ.சி மார்க்கெட் 5-வது முறையாக டெண்டர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் கோர்டில் வழக்கு தொடர்வோம் என்றார்.

    Next Story
    ×