என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஞ்சமலை சித்தர் கோவில் அருகே நடு ரோட்டில் குரங்குகள் சுற்றி திரியும் காட்சி.
இளம்பிள்ளை அருகே பரிதாபம் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் குரங்குகள்
- பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தர் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
- மலை தொடரில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவிற்காக சாலையை கடந்து வரும்போது குரங்குகள் வாகனங்களில் சிக்கி அடிக்கடி உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகின்றன.
காகாபாளையம்:
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே அமைந்துள்ளது, கஞ்சமலை சித்தேசுவரர் கோவில். இயற்கை எழில் சூழ்ந்த மலைகளுக்கு அருகில் கோவில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.
பிரசித்தி பெற்ற கஞ்சமலை சித்தர் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமி தினங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள்.
வன விலங்குகள்
மிகுந்த மூலிகை வளம் கொண்ட கஞ்சமலையில் குரங்குகள், முயல்கள், நரிகள், காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகளும், மயில்கள், குருவிகள் உள்ளிட்ட பல்வேறு இன பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.
குறிப்பாக இக்கோவில் மலை அடிவாரத்தில ஆயிரக் கணக்கான குரங்குகள் வசித்து வருகின்றன. அவை தினந்தோறும் உணவிற்காக கோவில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைகின்றன. குடியிருப்பு பகுதியில் புகுந்து வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துச் சென்று அட்டகாசம் செய்கின்றன. சில நேரங்களில் சிறுவர்களை கடித்து விடுகின்றன.
இந்த நிலையில் மலை தொடரில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு உணவிற்காக சாலையை கடந்து வரும்போது குரங்குகள் வாகனங்களில் சிக்கி அடிக்கடி உயிரிழக்கும் சம்பவம் நடைபெறுகின்றன. மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் மின் கம்பியில் நடந்து செல்வதால் குரங்குகள் மின்சாரம் தாக்கி உயிர் இழக்கின்றன.
எனவே வனத்துறை அதிகாரிகள், அதிக அளவில் உள்ள குரங்குகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






