என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாம் கொண்டாடும் சுதந்திரத்தை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம்- விஜய் வசந்த் எம்.பி
- போலி பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கி உள்ளனர்.
- வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள் முடிவு செய்யக்கூடாது.
நாம் நமது தேசத்தின் 79வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த நாளில், அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி, நம் தேசம் அடிமைத்தனத்தின் சங்கிலிகளை முறித்து, சுதந்திரத்தின் ஒளியை கண்டது. அந்த சுதந்திரத்தை பெற, எண்ணற்ற சுதந்திர வீரர்கள் தங்கள் உயிரையும், குடும்பத்தையும், சொத்தையும் தியாகம் செய்தனர்.
இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரத்தின் ஒவ்வொரு மூச்சிலும், அவர்கள் ரத்தமும், வியர்வையும், உறுதியும் கலந்திருக்கிறது. அவர்களின் தியாகத்தை நினைவு கூர்வது நமது கடமை. நான் பெற்ற இந்த சுதந்திரத்தைப் பாதுகாத்து, வளர்த்து அடுத்த தலைமுறைக்கு பெருமையாகக் கையளிப்பது நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
இன்று நாம் பிரிவினையை விட ஒற்றுமையையும், வெறுப்பை விட அன்பையும் தேர்ந்தெடுக்க வேண்டும். பிரிவினை மற்றும் வெறுப்பை விதைக்க நினைக்கும் சக்திகளை இனம் கண்டு தோற்கடிப்போம். நம் தேசத்தின் செழிப்பு, மக்களின் ஒற்றுமை, இளைஞர்களின் முன்னேற்றம், பெண்களின் உரிமைகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களின் நலன் இவை அனைத்தும் நமது நோக்கமாக இருக்க வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் நமக்கு கிடைத்த உரிமைகளை பறிக்க முயற்சிகள் நடக்கிறது. நமது அடிப்படை உரிமையான வாக்குரிமை கூட கேள்விகுறியாக உள்ளது. நமது உரிமைகளை பறிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துவோம்.
இந்த சுதந்திர தினத்தில், நம் தேசத்தை நீதியிலும் சமத்துவத்திலும் வளர்க்க உறுதிபடுவோம்.
"நாடு முதலில், நாமெல்லாம் ஒன்றாக" இந்த உணர்வோடு முன்னேறுவோம்.
முன்னதாக இந்திய அரசியல் சட்டத்தை அழிக்க நினைக்கும் மத்திய பிஜேபி அரசை கண்டித்து குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் குருந்தன்கோடு சந்திப்பில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு குருந்தன்கோடு கிழக்கு வட்டாரத் தலைவர் பொன். பால் துரை தலைமை தாங்கினார், கண்டன பொதுக்கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-
தேர்தல் ஆணையம் போட்டோவை பயன்படுத்தி போலி பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டைகளை உருவாக்கி உள்ளனர். அதேபோல பல இடங்களில் வாக்காளர்களை சேர்த்தும், நீக்கியம் உள்ளனர். இப்படி நிறைய விஷயங்கள் நடந்துள்ளது. இதற்கான தெளிவான விளக்கம் வேண்டுமென ராகுல் காந்தி அவர்கள் தேர்தல் கமிஷனிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு தேர்தல் கமிஷன் மற்றும் பாஜக-வினர், கண்டுகொள்ளாமல் தட்டிக் கழிக்கின்றனர். அவர்கள் ராகுல் காந்தி அவர்கள் பொய் கூறுகிறார்கள் எனவும் பேசி வருகின்றனர். ஓட்டு நமது அடிப்படை உரிமை, அதனை விட்டுக் கொடுக்கக் கூடாது. ராகுல் காந்தி அவர்கள் குரல் கொடுப்பது அவருக்காக அல்ல, நமக்காக பேசி வருகிறார்.
இதுகுறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென கூறியபோது மத்திய அரசு விவாதிக்க மறுத்துவிட்டது. தேர்தல் கமிஷனரிடம் கேள்வி எழுப்பினால் பதில் அளிக்கவில்லை, எல்லா மாவட்ட தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் இது குறித்து குரல் கொடுப்பார்கள் அதேபோல மக்களாகிய நீங்களும் ஏதோ இது ஒரு கட்சி கூட்டம் அல்லது நிகழ்ச்சி என நினைக்காமல் இந்தப் போலி வாக்கு சேர்ப்பதன் பின் விளைவுகள் குறித்து நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
நீங்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும், இல்லையென்றால் உங்களது ஓட்டு உரிமைகளும் போய்விடும், பீகாரை சேர்ந்த ஆறு லட்சம் பேரை தமிழகத்தில் வாக்காளர்களாக சேர்த்துள்ளனர். அதேபோல 15 லட்சம் பேரை அவர்கள் சேர்க்கும் போது நிலைமை என்ன ஆகும், தமிழகத்தில் இவ்வாறு வாக்காளர்களை சேர்க்கும் போது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என நாம் தான் முடிவு செய்ய வேண்டும், வெளி மாநிலங்களில் இருந்து வருகின்றவர்கள் முடிவு செய்யக்கூடாது.
நாம் தெளிவாக இருக்க வேண்டும் காங்கிரஸ் நிர்வாகிகள் வாக்காளர் பட்டியலை நம்முடைய பூத்களில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என்பதனை பார்க்க வேண்டும். ராகுல் காந்தி அவர்கள் பாரத் ஜோட யாத்திரை நடந்த போது அவர் நடந்து சென்று விடுவாரா என கேலி செய்தனர். எப்படி நடந்து விடுவார் பார்க்கலாம் என கூறினர்.
அந்த யாத்திரை கன்னியாகுமரியில் இருந்து தொடங்கப்பட்டது. அந்த யாத்திரைக காங்கிரஸ் கட்சி மீது மதிப்பும், காங்கிரஸ் கட்சி மீது பற்றுதலும் மக்களுக்கு ஏற்பட்டது. தமிழக அரசு பெண்களுக்கு உரிமை தொகை, பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை, மகளீர் இலவச பேருந்து பயணம் என்ன பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. எனவே இந்த நல்லாட்சி தொடர நாம் உறுதுணையாக இருப்போம் எல்லோரும் இணைந்து செயல்படுவோம்.
முன்னதாக பேருந்து பயணிகளின் கோரிக்கையை ஏற்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பொதுமக்களின் வசதிக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் நிதியில் பயோ கழிவறை அமைக்கப்பட்டது. அந்தக் கழிவறை தற்போது பயன்பாடின்றி காணப்படுகிறது.
அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, குறித்து குழித்துறை நகராட்சி ஆணையாளர் ராஜேஸ்வரன், பொதுப்பணித்துறை மேற்பார்வையாளர் பிரம்மசக்தி, நகராட்சி பொறியாளர் குறள்செல்வி, நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பிரவீன்குமார் மற்றும் அதிகாரிகளை நேரில் அழைத்து அதனை பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், மாநில பேச்சாளர்கள் குமரி மகாதேவன், அந்தோணி முத்து, கிழக்கு மாவட்ட தலைவர் கே டி உதயம், அகில இந்திய பொதுக்குழு உறுப்பினர் ஆண்டனி விஜிலியஸ் உட்பட பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர் .






