என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் பழுதான லிப்டுகளை சீரமைக்க கோரிக்கை
- லிப்ட் 2-வது தளத்தை அடைந்ததும் திடீரென பழுதாகி நின்றது. மேலும் லிப்ட்டின் கதவும் திறக்கவில்லை.
- போலீசார் கடப்பாரை மூலம் கதவை நெம்பி உடைத்து லிப்ட்டில் சிக்கிய பயனாளிகள் 7 பேரையும் மீட்டனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுமான மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது.
அலுவலகத்தில் 2-வது தளத்தில் உள்ள அறையில் நடந்த இந்த விழாவில் பங்கேற்பதற்காக கைத்தறி துறை அமைச்சர் காந்தி, கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி மற்றும் அதிகாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள லிப்ட்டில் சென்றனர்.
அங்குள்ள மற்றொரு லிப்ட்டில் பொதுமக்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் சென்றனர். அந்த லிப்ட் 2-வது தளத்தை அடைந்ததும் திடீரென பழுதாகி நின்றது. மேலும் லிப்ட்டின் கதவும் திறக்கவில்லை. இதனால் லிப்ட்டில் இருந்த பயனாளிகள் 7 பேரும் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்கள் லிப்ட்டில் இருந்தவாறு கதவை தட்டி சத்தம் போட்டனா். கதவை உடைத்தனர் இதையடுத்து கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று லிப்ட்டின் கதவை திறக்க முயன்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவை திறக்க முடியவில்லை.
இதையடுத்து போலீசார் கடப்பாரை மூலம் கதவை நெம்பி உடைத்து திறந்தனர். பின்னர் லிப்ட்டில் சிக்கிய பயனாளிகள் 7 பேரையும் மீட்டனர்.
கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 2 லிப்ட்டுகளும் இதே போல அடிக்கடி பழுதாகி விடுவதாகவும், கதவுகள் திறப்பதில்லை என்றும் பொதுமக்கள் பலரும் புகார் தெரிவித்தனர்.
இந்த 2 லிப்டுகளையும் முறையாக பராமரிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.






