search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் விடுமுறையால் அதிகரிக்கும் பக்தர்கள் பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
    X

    ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

    தொடர் விடுமுறையால் அதிகரிக்கும் பக்தர்கள் பழனி அடிவாரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • அய்யப்ப சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வரும்வழியில் பழனி மலை கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர்.
    • பழனி நகராட்சி சார்பில் சன்னதிவீதி மற்றும் பூங்காரோடு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி எந்திரம்மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது.

    பழனி:

    பழனி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

    தற்போது அய்யப்ப சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்கள் வரும்வழியில் பழனி மலை கோவிலுக்கு வந்து முருகனை வழிபட்டு செல்கின்றனர். மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி ேநாக்கி வந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்த நிலையில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தைப்பூசம் வரும் ஜனவரி 29-ந்தேதி தொடங்குகிறது. அரையாண்டு தேர்வு விடுமுறைகாலம் என்பதால் தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு முருகனை வழிபட வரும் பக்தர்களிடம் வியாபாரம் செய்வதற்காக அடிவாரபகுதியில் ஏராளமான தற்காலிக கடைகள் சாலையின் ஓரங்களில் போடப்பட்டுள்ளன.

    இதுபோன்ற திடீர் கடைகளால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் அவதிஅடைந்துள்ளனர். நெருக்கடிகளை குறைக்க அடிவாரப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால்பழனி நகராட்சி சார்பில் ் சன்னதிவீதி மற்றும் பூங்காரோடு சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஜே.சி.பி எந்திரம்மூலம் கடைகளின் முன்புற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டது.

    பல கடைக்காரர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொண்டனர். மீண்டும் ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தைப்பூசத்தை முன்னிட்டு வரும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி இன்னும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×