என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா முன்னிட்டு சிறப்பு அபிஷேசம் நடந்த காட்சி.
வாலாஜா தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் அனுமன் ஜெயந்தி விழா
- 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சிறப்பு ஹோமம்
- ஏராளமான பக்தர்கள் தரிசனம்
வாலாஜா:
வாலாஜா அடுத்த கீழ்புதுப்பேட்டையில் உள்ள ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி 3 நாட்கள் அபிஷேகங்களும், இலவச ஔஷதம் விழாவும் நடைபெற்று வருகிறது.
அதன்படி தன்வந்திரி பீடத்தில் இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு காலை தன்வந்திரி பீடத்தில் 9 அடி உயரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராஜகுபேர சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டர் பால் அபிஷேகமும், 1008 ஜாங்கிரிகள், வடைகள், எலுமிச்சம்பழம், வெற்றிலை, வாழைப்பழங்களால் மாலைகளும், வெண்ணெய், துளசி சாற்றி சிறப்பு அலங்காரத்தில் அனுமந்த ஹோமம் நடைபெற்றது.
நேற்று மாலை பீடத்திலேயே நந்தியுடன் அமைந்துள்ள ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரருக்கு 1000 கலசங்களில் புனித நீர் கொண்டு சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகளுடன் சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது. இந்த கலசாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அபிஷேகத்திற்கு தங்கள் கைகளாலேயே கலசங்களை எடுத்து கொடுத்து, ஸ்ரீ மரகதலிங்கேஸ்வரரை மனமுருக வழிபட்டு, பிரசாதமும், பீடாதிபதி ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசியும் பெற்று சென்றனர்.
முன்னதாக காலை தன்வந்திரி பீடத்திற்கு வந்த மலேசியா சங்கரமடம், அண்ணாமலையார் தேவஸ்தானத்தை சேர்ந்த ஜகத்குரு சங்கராச்சார்ய சத்குரு ஸ்ரீஸ்ரீ ஜெயப்பிரகாஷேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளுக்கு, பீடத்தின் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் சகஸ்ர கலசாபிஷேகம், அனுமன் ஜெயந்தி, அன்னாபிஷேகம் ஆகியவற்றிற்கான பூர்வாங்க ஹோம, பூஜைகளை தொடங்கி வைத்து, தன்வந்திரி பீடத்தில் தரிசனம் செய்து ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் ஆசி பெற்று சென்றார். அப்போது ஈரோடு சுந்தரேச சிவாச்சாரியார் உள்பட பலர் உடன் இருந்தனர். மேலும் வருகிற 26ம்தேதி பகல் 12 மணிக்கு மூலவர் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.






