என் மலர்
உள்ளூர் செய்திகள்

திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்
- வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது
- கலெக்டர் தகவல்
ராணிப்பேட்டை:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய சட்டப்பூர்வ ஆணையில் தெரிவித்தபடி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ள மாவட்ட திட்டமிடும் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
அதன்படி இன்று தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பெறப்பட்டது. வேட்பு மனு பெறுவதற்கான கடைசி நாள் 10-ந் தேதியாகும். 12-ந்தேதி காலை 11 மணிக்கு வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 14-ந் தேதி மாலை 3 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுதலும் நடைபெறும்.
23-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.
24-ந்தேதி தேர்தல் நடைமுறைகள் முடிவு செய்யப்படும். 28-ந்தேதி புதியதாக தேர்வு செய்யப்பட்ட குழு உறுப்பினர்களின் முதல் கூட்டம் நடைபெறும்.
தேர்தலில் மாவட்ட திட்டமிடும் குழுவிற்கு மாவட்ட ஊராட்சியில் இருந்து 8 உறுப்பினர்களும், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றில் இருந்து 4 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.
இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சியில் 13 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், 6 நகராட்சிகளின் 168 வார்டு உறுப்பினர்களும், 8 பேரூராட்சிகளின் 119 வார்டு உறுப்பினர்களும் ஆக மொத்தம் 300 வார்டு உறுப்பினர்கள் வாக்காளர்களாக உள்ளனர்.
ஊரக, நகர்ப்புற பகுதிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேட்பு மனுக்கள் பெறப்படும். ஊரகப்பகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி, நகர்ப்புற பகுதிக்கு மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் சத்திய பிரசாத் ஆகியோர் உதவி தேர்தல் அலுவல ர்களாக செயல்படுவர்.
இந்த தகவலை கலெக்டரும், தேர்தல் அலுவலருமான வளர்மதி வெளியிட்டுள்ள அறி விப்பில் தெரிவித்துள்ளார்.






