search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொண்டி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
    X

    முருகன்

    தொண்டி அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்ட பொதுமக்கள்

    • தொண்டி அரசு ஆஸ்பத்திரியை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் வேலை பார்த்து கொண்டிருந்த போது அவரது காதில் கட்டுக்கம்பி குத்தியது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அண்ணாநகரை சேர்ந்தவா முருகன் (வயது 35). டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இவருக்கு தொண்டீஸ்வரி என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகன் வேலை பார்த்து கொண்டிருந்த போது அவரது காதில் கட்டுக்கம்பி குத்தியது. காயமடைந்த அவர் அருகில் உள்ள தனியார் கிளீனிக்கில் சிகிச்சை பெற்றார். அப்போதிருந்து முருகனின் உடல் நிலை மோசமானது. நேற்று இரவு முருகனின் உடல் நிலை கவலை கிடமானதால் தொண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    தவறான சிகிச்சை அளித்ததால் முருகன் இறந்ததாக புகார் கூறிய உறவினர்களும், அப்பகுதி பொதுமக்களும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி தொண்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவு நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து தகவலறிந்த ஏ.டி.எஸ்.பி.பாஸ்கரன் தலைமையில், பரமக்குடி டி.எஸ்.பி. திருமலை, தொண்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் விஜயபாஸ்கர், காசி, ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மகளிர் நிலைய இன்ஸ்பெக்டர் ஜெயபிரிட்டோ, சப்-இன்ஸ்பெக்டர்கள் சித்ராதேவி, சுதர்சன், பாலசிங்கம் மற்றும் ஏராளமான போலீசார்கள் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முருகனின் சாவு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×