என் மலர்
உள்ளூர் செய்திகள்

மனிதநேய வார நிறைவுவிழாவில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார். அருகில் முருகேசன் எம்.எல்.ஏ. உள்பட பலர் உள்ளனர்.
மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 287 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
- மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 287 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
- பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் கோரிக்கையில் குறித்த மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் 287 மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இன்று பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.
இதேபோல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் மனிதநேய வார நிறைவு விழா கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். மனிதநேய வார விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், சிறந்த விடுதி காப்பாளர்களுக்கும் நினைவு பரிசு வழங்கினார். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அருண், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அன்னம்மாள், தனி வட்டாட்சியர் சண்முகசுந்தரம், சிறப்பு பேச்சாளர் அண்ணாதுரை, ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.






