search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எமனேசுவரம் கண்மாய் நீர்வழிப்பகுதி ஆக்கிரமிப்பு
    X

    எமனேசுவரம் கண்மாய் நீர்வழிப்பகுதி ஆக்கிரமிப்பு

    • எமனேசுவரம் கண்மாய் நீர்வழிப்பகுதி ஆக்கிரமிப்பால் 7 கிராம விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • எமனேசுவரம் நீர்ப்பாசன சங்க தலைவர் துரை. நாகராஜனிடம் முறையிட்டனர்.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 3-வது பெரிய கண்மாய் எமனேசுவரம் கண்மாய் ஆகும். இந்த கண்மாய்க்கு பாத்தியப்பட்ட குமார குறிச்சி, காந்திநகர், பெரும்பச்சேரி, மலையான் குடியிருப்பு, எமனேசுவரம், சுந்தரனேந்தல், ரகுநாதமடை ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசனம் செய்து வாழ்ந்து வருகின்றனர்.

    சுமார் 5 ஆயிரம் ஏக்கர் நஞ்சை, புஞ்சை நிலங்களில் அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகள் கடந்த பல ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்றனர். வானம் பார்த்த பூமியான இங்கு வைகை ஆறு நீர்ப்பாசனத்தை நம்பியே விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.

    வைகை கால்வாய் வழியாக வரக்கூடிய நீர் வழித் தடத்தை மறைத்து உயர்ந்த கட்டிடங்களை கட்டி அந்த பகுதியை மேடாக்கி கண்மாய்க்கு வரக்கூடிய நீர்வரத்தை வராமல் தடுத்து வருவதாக மேற்கண்ட 7 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் எமனேசுவரம் நீர்ப்பாசன சங்க தலைவர் துரை.நாகராஜனிடம் முறையிட்டனர்.

    அதன்பேரில் அவர் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு, சிவகங்கை மாவட்ட கலெக்டர், இளையான்குடி தாசில்தார், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை தலைமை பொறியாளர் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

    எமனேசுவரம் கண்மாய் உள்வாய் நீர் பிடிப்பு பகுதிகளில் பட்டா நிலங்க ளில் புதிய வீடுகள், குடியி ருப்புகள் கட்டி வருகின்றனர். விவசாயம் செய்யக்கூடிய நஞ்சை நிலங்களை அழித்து பிளாட்டு போட்டு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் நீர்வழி பகுதியில் முறையான விதிமுறைகளை பின்பற்றாமல் புதிய கட்டிடங்கள் கட்டுவதால் கண்மாயின் நீர்வரத்து பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இது சம்பந்தமாக பல்வேறு துறை அதிகாரி களிடம் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது கண்மாயின் உள்வாயிலில் மராமத்து வேலைகளும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் கண்மாயின் நீர்ப் பிடிப்பு எல்லை பகுதிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் செய்துள்ளதால் நீர்வரத்து, விநியோகம் போன்றவை பாதிக்கும் நிலை உள்ளது.

    இதேநிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கண்மாய் பகுதி பாலைவனமாக மாறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. எமனேசுவரம் கண்மாயை நம்பி விவசாயம், குடிநீர் போன்றவைகளை எதிர்பார்த்து வாழும் 7 கிராம மக்கள் சோதனைகள், துயரங்கள், வறட்சிகளை சந்திக்கும் நிலை உள்ளது.

    எனவே குமாரகுறிச்சி எமனேசுவரம் கண்மாயை நம்பி வாழும் ஏழை, எளிய விவசாய மக்கள் பாதிப்ப டையாத வகையில் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×