என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    பொன்னமராவதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    பொன்னமராவதி:

    பொன்னமராவதியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரும், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைவருமான வைரமுத்து, அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டு வரும் உள்ளாட்சித்தேர்தலில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து பேசினார்கள்.

    இதில் முன்னாள் அமைச்சர் ராதகிருஷ்ணன், மாவட்ட சேர்மன் ராமையா, ஒன்றியச் செயலாளர் அழகுசுப்பையா, நகரச் செயலாளர் ராஜேந்திரன், ஒன்றியக் குழுதுணைத் தலைவர் மீனாள்முருகப்பன், புதுகை நகராட்சித் தலைவர் ராஜசேகரன், பேரூராட்சித் தலைவர் ராஜாஅம்பலகாரர், நிர்வாகிகள் காசிகண்ணப்பன், பழனிச்சாமி, டேவிட் பழனிச்சாமி, மலைச்சாமி, மாரிமுத்து, செல்வராஜ், பழனியப்பன். சிதம்பம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து அ.தி.மு.க. கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து தலைமையில் நடைபெற்றது.

    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெறுவது குறித்து அ.தி.மு.க. கட்சியின் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் வீட்டு வசதி வாரிய தலைவர் பி.கே.வைரமுத்து தலைமையில் நடைபெற்றது.

    இதில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு அவர்கள் தொகுதி முழுவதும் உள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து  யாருடைய சிபாரிசும் இல்லாமல் கட்சியில் வெற்றி வாய்ப்பு உள்ள நபர்களுக்கு சீட் வழங்கப்படும் என்றும் உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்றத்தலைவர் முதல் கவுன்சிலர் உட்பட அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும்.

    அதற்கு கட்சி நிர்வாகிகள் எப்படி செயல்படவேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

    திருமயம் பாரத மிகு மின் நிறுவனம் எதிரே இருசக்கரவாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாரத மிகு மின் நிறுவனம் எதிரே இருசக்கரவாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் இருவர் படுகாயம் அடைந்தனர்.

    சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி சென்ற அரசு பேருந்து  திருமயம் பாரத மிகு மின் நிறுவனம் எதிரே சென்ற போது முன்னாள் சென்ற இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காரைக்குடியை சேர்ந்த ஜபருகான்,ஷாஜகான் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.இது குறித்து அப்பகுதி மக்கள் திருமயம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து சென்று, விபத்தில் படுகாயமடைந்த ஜபருகான்,ஷாஜகான் ஆகிய 2 பேரையும் மீட்டு திருமயம்  அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து திருமயம் போலீசார் வழக்கு பதிவு செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மலையக்கோவில் முருகன் கோவிலில் திருப்படி திருவிழா இன்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெறுகிறது.
    புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே உள்ள மலையக்கோயிலில் உள்ள முருகன் கோவிலில் 49ம் ஆண்டு திருப்படி விழாவை முன்னிட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. கணபதி ஹோமம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற்றது. கணபதி ஹோமத்தை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடைபெற்றன.

    தொடர்ந்து திருப்படி விழா இன்று காலை 9 மணிக்கு துவங்கி மாலை வரை நடைபெறுகிறது. விழாவில் சிவாச்சாரியார்கள் சோம சுந்தரக் குருக்கள், சுப்பிரமணியக்குருக்கள், கண்ணன் குருக்கள், விஸ்வநாத குருக்கள், சோ.சுப்பிரமணியக் குருக்கள் கலந்து கொண்டு கணபதி ஹோமத்திற்கு யாகம் வளர்த்தனர். விழாவில் நமண சமுத்திரம், நற்சாந்துப்பட்டி, விராச்சிலை, குலமங்களம், குழிபிறை, மேலப்பனையூர், பனையப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக் கணக்கான பொதுமக்களும், பக்த்தர்களும் கலந்து கொண்டனர்.

    அறந்தாங்கி அருகே மணல் குவியலுக்குள் கிடந்த பல லட்சம் மதிப்புள்ள ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது.

    அறந்தாங்கி:

    பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி வழியாக அகல ரெயில்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது மருதங்குடி பகுதியில் ரெயில் பாதையின் இருபுறமும் தடுப்புசுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியை மதுரையை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்து செய்து வருகிறது. இப்பணிக்காக அழியாநிலை மணல் குவாரியில் இருந்து லாரிகளில் மணல் எடுத்து வரப்பட்டு மருதங்குடி பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்தது.

    நேற்று பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தேவையான அளவு மணல் அள்ளும் பணி நடைபெற்றது. திடீரென எந்திரத்தில் ஏதோ தட்டுப்படவே, பொக்லைன் எந்திரத்தின் டிரைவர் மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் தங்கபாண்டியன், கார்த்திக்கேயன் ஆகியோர் தட்டுப்பட்ட பொருளை பார்த்தனர். அப்போது ஐம்பொன்னாலான பெருமாள் சிலை ஒன்று மணல் குவியலுக்குள் கிடந்தது தெரியவந்தது. ஒரு அடி உயரத்தில் 5 கிலோ எடை இருந்த அந்த சிலை மிகவும் பழமையானதாக இருந்தது.

    இது குறித்து அவர்கள், அப்பகுதி பொதுமக்களிடம் கூறவே, ஏராளமான பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு சென்று சிலையை பார்வையிட்டனர். மேலும் அறந்தாங்கி வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தாசில்தார் மணிவண்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் அதிகாரிகள் சென்று சிலையை மீட்டனர். பின்னர் அதனை அறந்தாங்கி கருவூலத்தில் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட சிலையின் மதிப்பு பல லட்சம் இருக்கும்.

    அந்த சிலை மணல் குவியலுக்குள் எப்படி வந்தது என்று தெரியவில்லை. சிலை கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் யாராவது போலீசாருக்கு பயந்து அழியாநிலை பெரியாற்றில் ஐம்பொன் சிலையை போட்டு விட்டு சென்றிருக்கலாம். மணல் அள்ளும் போது அதனுடன் சேர்ந்து வந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அல்லது ஏதாவது கோவிலில் இருந்து கொண்டு வந்து போடப்பட்டதா? என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கே.பி.கே. தங்கவேலு தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் கே.பி.கே. தங்கவேலு தலைமையில் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு திருமயம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் எம்.பி.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருமயம் அருகே உள்ள குழிபிறை ஊராட்சியிலிருந்து அ.தி.மு.க., த.மா.கா., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் இணைந்தனர்.

    அவர்களுக்கு திருமயம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ரகுபதி சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் சர்புதீன்,முன்னாள் ஒன்றியக் குழுத்தலைவர் சுப.துரைராஜா,முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் ராஜமாணிக்கம் ,ஊராட்சி மன்றத் தலைவர்கள் சிதம்பரம், மங்களராமன், பழனிவேலு, ஒன்றிய துணைச்செயலாளர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய பொருளாளர் காத்தப்பன், மாவட்ட பிரதிநிதி மேகநாதன், செம்பையா, வெள்ளைச்சாமி ,,ஏ.எல்.முத்து, பி.ஆர்.அறிவ ழகன், ரெத்தினவேலு, சி.சந்திரன் , ராஜா , ஊராட்சி செயலாளர் அண்ணா துரை, முல்லை ரமேஷ், வி.மணி மாறன், எஸ்.சேது ராமன், கணேசன் உட்பட ஏராளமான தி.மு.க. வினர் கலந்து கொண்டனர்.

    இலுப்பூர் மதர்தெரசா பாலிடெக்னிக் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பில் ரத்ததான முகாம் கல்லூரியில் நடைபெற்றது.

    விராலிமலை:

    இந்த ரத்ததான முகாமிற்கு கல்வி நிறுவனங்களின் நிறுவனர் இரா.சின்னதம்பி தலைமை தாங்கினார். கல்லூரியின் தாளாளர் உதயக்குமார் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் தினேஷ்குமார் முகாமிற்கு வந்த அனைவரையும் வரவேற்றார்.

    முகாமில் புதுக்கோட்டை ரத்த வங்கி தலைமை மருத்துவர் டாக்டர்.சலீம் அப்துல்குத்தூஸ் வாழ்த்துரை வழங்கினார். அதன் பின்னர் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டத்தை சேர்ந்த 100 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். முகாமில் துறைதலைவர்களான ராதாகிருஷ்ணன், சுதாபிரியா, கோவிந்தராஜ், ராகவேந்திரன், முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம் நிறைவில் நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் வினோத் அய்யப்பன் நன்றி கூறினார். முகாமிற்கான ஏற்பாடுகளை விராலிமலை வட்டார மருத்துவ அலுவலர் தமிழ்மணி, சுகாதார மேற்பார்வையாளர் சங்கரன், ஆய்வாளர்களான செல்வராஜ், கண்ணன், குமரேசன் மற்றும் முகமது யூசுப் ஆகியோர் செய்திருந்தனர்.

    காராவயல் கோவிலில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்குகளுக்கு பூஜை செய்து அம்பாளை வழிபட்டனர்.

    அறந்தாங்கி:

    அறந்தாங்கி அருகே காராவயல் உச்சினி மகா காளியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு குத்து விளக்குகளுக்கு பூஜை செய்து அம்பாளை வழிபட்டனர்.

    அறந்தாங்கி அருகே காராவயல் உச்சினி மகா காளியம்மன், வீரபத்திர சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 11–ஆம் ஆண்டாக திருவிளக்கு பூஜை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட குத்து விளக்குகளுக்கு, சிவாச்சாரியார் வேதமந்திரங்கள் கூற பெண்கள் அதை திரும்பக்கூறி, குத்து விளக்குகளுக்கு பூஜைகள் செய்து, மழை வளம் பெருகவும், விவசாயம் செழிக்கவும், வீட்டில் அனைவரும் நோய் நொடியின்றி மகிழ்ச்சியாக வாழவும், குழந்தைகள் நல்ல முறையில் படிக்கவும், உலகம் அமைதி பெறவும் வேண்டி பூஜைகள் செய்தனர்.

    இந்த பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். திருவிளக்கு பூஜையை முன்னிட்டு உச்சினி மகாகாளியம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இளந்தென்றல் இளைஞர் மன்றத்தினர் மற்றும் காராவயல் கிராமத்தினர் செய்திருந்தனர்.

    கோ–கோ போட்டியில் காரையூர் பள்ளி சாதனை

    பொன்னமராவதி:

    பொன்னமராவதி அருகே உள்ள காரையூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ,மாணவிகள் குறுவட்ட கோ,கோ போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். குழிபிறைப்பள்ளியில் நடைபெற்ற திருமயம் குறுவட்டப்போட்டியில் 19வயது உட்பட்டோருக்கான கோ,கோ விளையாட்டில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்முதலிடம் பெற்றும் 1 7 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் 2வது இடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலைமையாசிரியர் லதா,ஊராட்சித்தலைவர் பாரதி சிதம்பரம்,உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிவேல், நாகராஜன் உட்பட பலர் பாராட்டினார்கள்.

    ஆடி மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
    ஆடி மாதத்தை முன்னிட்டு புதுக்கோட்டையில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் வரிசையாக நின்று சிறப்பு வழிபாடு நடத்தினர். மேலும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடைபயணம் மேற்கொண்ட பக்தர்கள் இக்கோவிலில் தங்கியிருந்து காலையில் மாரியம்மனை தரிசனம் செய்தபின் தங்களது பாதயாத்திரையை தொடங்கினர்.

    சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகங்கள், சிறப்பு வழிபாடுகள், தீபாராதனைகள் நடைபெற்றன. நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர்.
    கோட்டைப்பட்டினத்தில் 4-வது நாளாக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தினமும் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து சுமார் 250 விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்கள் மற்றும் அவர் களது படகுகளை விடுவிக்க வேண்டும், மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களுக்கு அரசு வழங்கும் மானிய விலையிலான டீசல் அளவை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 20-ந்தேதி முதல் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தினமும் சுமார் ரூ.2 கோடி அளவுக்கு மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சங்கத்தினர் கூறும் போது, இலங்கை கடற்படையினரின் நடவடிக்கையால் தமிழகத்தில் மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும். எங்களது போராட்டம் காரணமாக தினமும் சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான மீன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருச்சி அருகே அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கீரனூர்:

    புதுக்கோட்டை–திருச்சி மாவட்ட எல்லையில் அமைந்துள்ள கீரனூரை சேர்ந்தவர் கருப்பையா. பிரபல தொழிலதிபரான இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

    இவரது மனைவி இந்திரா. கீரனூர் அருகே உள்ள தாகினிப்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். நேற்று மாலை இந்திரா மற்றும் அவரது வீட்டில் வேலை பார்க்கும் பாப்பா (வயது 40) என்பவரை துணைக்கு அழைத்துக் கொண்டு புதுக்கோட்டையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்றார்.

    சாமி தரிசனம் முடித்து விட்டு இரவு பஸ் மூலம் கீரனூருக்கு புறப்பட்டார். தாகினிப்பட்டி செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் இறங்கி இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை மோட் டார் சைக்கிளிலில் 3 மர்ம நபர்கள் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.

    ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்திராணியை வழி மறித்து அவரது கழுத்தில் கிடந்த 25 பவுன் தங்க நகைகளை பறித்து கொண்டு தப்பி சென்றனர். இந்தி ராணி திருடன், திருடன் என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மர்ம நபர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்களும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து மறைந்தனர்.

    இது குறித்து கீரனூர் போலீஸ் நிலையத்தில் இந்தி ராணி புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் அருள்மொழி அரசு, சப்–இன்ஸ்பெக்டர் கண்ணதாசன், மற்றும் போலீசார் டேவிட் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    இதே போல் கீரனூர் அருகே உள்ள சென்னையங்குடி பகுதியைச் சேர்ந்த சாந்தி தலைமையாசிரியர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது 3 மர்ம நபர்கள் அவரை வழி மறித்து அவரிடமிருந்த 10 பவுன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றனர்.

    இதேபோல் கீரனூர் சிவன் கோவில் பகுதியில் மைனா, தமிழரசி இருவரிடமும் 7 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். கீரனூர் பகுதியில் அடுத்தடுத்து நடந்த நகை பறிப்பு சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    ×