என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கறம்பக்குடி தாலுக்கா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்
    X

    கறம்பக்குடி தாலுக்கா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டம்

    • கறம்பக்குடி தாலுக்கா அலுவலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
    • சாலை மறியல் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தைக்கு தாலுக்கா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் கரு தெற்கு தெரு ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை, 100 நாள் வேலையை முழுமையாக தர வேண்டும், சாலை வசதி செய்து தர வேண்டும் மற்றும் ஊராட்சியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் கட்டிடத்தை புதுப்பித்து தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    இதன்படி சாலை மறியல் செய்ய முயன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தைக்கு தாலுக்கா அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் அங்கு யாரும் வரவில்லை. இதனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கறம்பக்குடி தாலுக்கா அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து காத்திருப்பு போராட்டம் செய்தனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து கறம்பக்குடி வட்டாட்சியர் இராமசாமி, கறம்பக்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கருணாகரன், திலகவதி, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×