search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நண்பரை அரிவாளால் வெட்டிய வாலிபர்
    X

    நண்பரை அரிவாளால் வெட்டிய வாலிபர்

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை
    • மது போதையில் வாலிபர் அரிவாளால் நண்பரை வெட்டிய சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மணிவிலன்தெரு பகுதியை சேர்ந்தவர் அம்சத் அலி(வயது 32). அதே பகுதியைச் சேர்ந்த ஷாஜகான் (33). இவர்கள் இருவரும் நண்பர்களாவார்கள். இந்த நிலையில் அம்சத் அலியும், ஷாஜகானும் மணிவிலன் தெரு பகுதியில் உள்ள பாழடைந்த வீட்டில் உட்கார்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.இதில் போதை தலைக்கேறியதும் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ஷாஜகான் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அம்சத் தலையை சரமாரியாக வெட்டினார். இதில் அவரது தலை, தொடை , கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. ரத்த வெள்ளத்தில் அலறிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லப்பட்டார். அங்குள்ள மருத்துவமனையில் அம்சத் அலிக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக அறந்தாங்கி போலீசார் ஷாஜகான் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அம்சத் அலியின் மோட்டார் சைக்கிளை ஏற்கனவே ஷாஜகான் உடைத்து நொறுக்கியதாக தெரிகிறது. பின்னர் அவர்கள் சமரசமாகி நட்பை தொடர்ந்தனர். இந்த நிலையில் போதையில் ஷாஜகான் தனது மோட்டார் சைக்கிளை உடைத்தது தொடர்பாக அவரிடம் கேட்டு தகராறு செய்திருக்கலாம்.இதில் ஆத்திரம் அடைந்த ஷாஜகான் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பி சென்றிருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பெண்கள் சம்பந்தப்பட்ட ஏதேனும் பிரச்சனைகள் உள்ளதா? என பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.





    Next Story
    ×