search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாவட்டத்தில் 144 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
    X

    சேலம் மாவட்டத்தில் 144 சாயப்பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

    • நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாய கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகளை கண்டறிந்து, அவற்றிற்கு அபராதம் விதித்து, சீல் வைத்து மூடி வருகின்றனர்.
    • அனுமதி பெறாமல் கழிவுநீரை வெளியேற்றியதாக இதுவரை 144 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    அன்னதானப்பட்டி:

    சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளிலும், சாக்கடை கால்வாய்களிலும் சாய கழிவு நீரை வெளியேற்றும் சாயப்பட்டறைகளை கண்டறிந்து, அவற்றிற்கு அபராதம் விதித்து, சீல் வைத்து மூடி வருகின்றனர். மேலும் திருமணிமுத்தாற்றில் கழிவு நீரை திறந்து விடும் சாயப்பட்டறைகளுக்கு அபராதம் விதித்து, மின் இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் செந்தில் விநாயகம் மற்றும் உதவி பொறியாளர்கள் மாவட்டம் முழுவதும் ஆய்வு நடத்தி, விதிமுறைகளை மீறும் சாயப்பட்டறைகள், சேகோ ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். நடப்பாண்டில் அனுமதி பெறாமல் கழிவுநீரை வெளியேற்றியதாக இதுவரை 144 சாயப்பட்டறைகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

    சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை வெளியேற்றிய 5 சாயப்பட்டறைகளுக்கு ரூ.29.92 லட்சம், ஒரு சேகோ ஆலைக்கு ரூ.2.12 லட்சம், கழிவுகளை பொது வெளியில் கொட்டிய ஒரு மருத்துவமனைக்கு ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.33.04 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்த 7 ஆலைகளின் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வந்த 3 ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்டு வரும் சாயப்பட்ட றைகள் கண்காணிக்கப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மாசுக்கட்டுப்பாடு வாரி யத்தின் அனுமதி பெறாமல், சாயப்பட்டறையின் கழிவு நீரை வெளியேற்றினால் அந்த பட்டறையின் மின் இணைப்பு துண்டிக்கப்படும். தொடர்ந்து அந்த பட்டறை மூடப்படும்.

    கழிவு நீரை முறையாக சுத்திகரிப்பு செய்யாத நிறுவனங்கள் மீது அபராதம் விதித்து, அவை மூடப்படும். முறையாக அனுமதி பெறாமல் சாயப்பட்டறையை வாடகைக்கு விட்டால், அதன் உரிமையாளர் மீது வழக்கு தொடரப்படும். அவரிடமிருந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு இழப்பீட்டு தொகை வசூலிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×