search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோடை வெப்பம் அதிகரிப்பால் புதிய உச்சம்- தமிழகத்தில் மின்தேவை 18,252 மெகாவாட்டாக உயர்வு
    X

    கோடை வெப்பம் அதிகரிப்பால் புதிய உச்சம்- தமிழகத்தில் மின்தேவை 18,252 மெகாவாட்டாக உயர்வு

    • விவசாய பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால் அந்தப் பிரிவில் மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் அதிகரித்து உள்ளது.
    • முந்தைய உச்சபட்ச நுகர்வு மார்ச் 16-ந் தேதி 18 ஆயிரத்து 53 மெகாவாட்டாக இருந்தது.

    சென்னை:

    தமிழகத்தில் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் உள்ளனர். தினசரி மின் தேவை சராசரியாக 15 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் உள்ளது. இந்த அளவு, கோடைகாலத்தில் 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு அதிகரித்தும், குளிர்காலத்தில் 12 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு குறைந்தும் காணப்படுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான கோடை காலம் தொடங்கி விட்டதால் மின்சாதன பொருட்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக, தினசரி மின் தேவை 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத்தாண்டி செல்கிறது.

    மேலும், விவசாய பிரிவில் கூடுதலாக வழங்கப்பட்ட 1.50 லட்சம் மின் இணைப்புகளால் அந்தப் பிரிவில் மட்டும் கூடுதலாக 727 மெகாவாட் அதிகரித்து உள்ளது.

    இத்தகைய காரணங்களால் கடந்த மாதம் 4-ந் தேதி தினசரி மின் தேவை முதல் முறையாக 17,584 மெகாவாட்டாக அதிகரித்தது. இதற்கு முன் கடந்த ஆண்டு ஏப்.29-ந் தேதி 17,563 மெகாவாட் என்ற சாதனை அளவாக இருந்தது.

    விவசாயத்துக்கான 18 மணி நேர மின்விநியோகம் மற்றும் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் தொடங்கி உள்ளதால் மின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இதனால் முன் எப்போதும் இல்லாத அளவாக மார்ச் 15-ந் தேதி தினசரி மின்தேவை 17 ஆயிரத்து 647 மெகாவாட்டாக அதிகரித்தது.

    ஆனால் மார்ச் 17-ந் தேதி தினசரி மின்நுகர்வு 18 ஆயிரத்து 53 மெகாவாட் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டி தனது முந்தைய நாள் சாதனையை முறியடித்தது.

    இந்த நிலையில் தினசரி மின் நுகர்வு நேற்று முன்தினம் 18 ஆயிரத்து 252 மெகாவாட் அளவு அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதுகுறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    வியாழக்கிழமை (நேற்று முன்தினம்) தமிழ்நாட்டின் மின் நுகர்வு 18 ஆயிரத்து 252 மெகாவாட் அளவை எட்டியுள்ளது.

    இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உச்சபட்ச நுகர்வு மார்ச் 16-ந் தேதி 18 ஆயிரத்து 53 மெகாவாட்டாக இருந்தது.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×