என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே பஞ்சாயத்து தலைவரை விசாரணைக்காக அழைத்து சென்ற போலீசார் : பொதுமக்கள் சாலை மறியல்
- ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர்.
- திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் மகன் ரங்கநாதன்(வயது 42) ஊராட்சி மன்ற தலைவர். இந்நிலையில் இவர் மீது கள்ளக்குறிச்சி ஏமப்பேர் பகுதியை சேர்ந்த அய்யாக்கண்ணு மகன் ஆறுமுகம், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை தொடர்பாக கடந்த மார்ச் மாதம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.
இதனையடுத்து இதுபற்றி விசாரிப்பதற்காக நேற்று ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை ரிஷிவந்தியம் காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் தரப்பினர் மற்றும் முனிவாழையை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் ரிஷிவந்தியம் காவல் நிலையம் எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை விசாரணைக்காக அழைத்து சென்றதை கண்டித்து கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த திருக்கோவிலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபு மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் ஊராட்சி மன்ற தலைவர் ரங்கநாதனை போலீசார் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






