என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 8 இடங்களில் சிலைகளை கரைக்க அனுமதி- மாவட்ட கலெக்டர் அருணா தகவல்
- சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
- எனாமல் போன்ற செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான முன்னேற்பாடுகள் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், மாவட்ட வருவாய் அதிகாரி கீர்த்தி பிரிய தர்ஷினி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் உமாமகேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் தனபிரியா (பொது), மணிகண்டன் (வளர்ச்சி), கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சவுந்தர்ராஜன், கோட்டாட்சியர்கள் மகாராஜ் (ஊட்டி), பூஷணகுமார் (குன்னூர்), உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சாம்சாந்தகுமார், ஊட்டி நகராட்சி கமிஷனர் ஏகராஜ், வட்டார போக்குவரத்து அதிகாரி தியாகராஜன் உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் அருணா பேசுகையில் கூறியதாவது:
நீலகிரி மாவட்டத்தில் தெர்மாகோல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி சிலைகளை உருவாக்கக்கூடாது. விநாய கர் சிலைகளை கரைக்கும் போது மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தின் விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருட்களால் ஆன சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்.
சிலைகளின் ஆபரணங்களை தயாரிப்பதற்கு உலர்ந்த மலர் கூறுகள், வைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம். மரங்க ளின் இயற்கை பிசின்களை பயன்படுத்தி சிலைகளை பளபளப்பாக மாற்றலாம். சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை சாயங்களை பயன்படுத்தி வர்ணம் பூசலாம். எனாமல் போன்ற செயற்கை வண்ணங்களை பயன்படுத்தக்கூடாது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி-குந்தா தாலுகாவில் காமராஜர்சாகர் அணை, மசினக்குடி மரவகண்டி அணை, செம்மநத்தம் ஆறு, நடுவட்டம் டி.ஆர்.பஜார் அணை, குன்னூர் தாலு காவில் லாஸ் நீர்வீழ்ச்சி, கோத்தகிரி தாலுகாவில் உயிலட்டி நீர்வீழ்ச்சி, கூட லூர் தாலுகாவில் இரும்பு பாலம், பந்தலூர் தாலுகாவில் பொன்னானி பகுதிகளில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.