

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே மூக்கனூர் உலகுடை யாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மனுவில் கூறியுள்ளதாவது, உலகுடையாம்பட்டு கிராமத்தில் பிரதம மந்திரி வீடுகட்ட திட்டம் மற்றும் தமிழக அரசின் வீடு கட்டும் திட்டத்தின் பயனாளிகள் பலரும் வீடு கட்டி வருகின்றனர். இதில் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய சிமெண்ட் மூட்டைகளை பஞ்சாயத்து தலைவர் கையாடல் செய்துள்ளார்.
மேலும் வீடு கட்டும் பயனாளிகளுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய பணத்தையும், அரசு அறிவித்த கூடுதல் தொகையையும் பயனாளிகளிடம் எனக்கு சேர வேண்டிய பணம் எனக் கூறி பெற்றுக் கொண்டதாகவும், இவ்வாறு அரசின் வீடு கட்டும் திட்டத்தில் பல்வேறு முறைகேடு செய்துள்ள மூக்கனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயக்குமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மனுவில் கூறப்பட்டுள்ளது.