10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்

10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. தொடர்ந்து மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 14-ந் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ்
Published on

சேலம்:

தமிழகத்தில் கடந்த கல்வி ஆண்டுக்கான (2021-2022) 10-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு மே மாதம் 6-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடத்தப்பட்டது. இந்த தேர்வை சேலம், நாமக்கல் மாவட்ட மாணவ- மாணவிகள் உள்பட தமிழகம் முழுவதும் 9.3 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதினர். இதன் முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி வெளியிடப்பட்டது.

தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் ஜூலை மாதம் வழங்கப்பட்டன.

இதையடுத்து ஒர்ஜினல் சான்றிதழ் அச்சிடும் பணி நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அச்சிடுதல் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டதால், அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் செய்வதில் தாமதம் நிலவியது. இதையடுத்து தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் அடிப்படையில் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் அச்சிடுதல் பணி கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நிறைவு பெற்றது. அதன் சரிபார்ப்பு பணிகள் முடிக்கப்பட்டு, மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகங்களுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த சான்றிதழ்கள் மாவட்ட கல்வி அலுவலகங்கள் வாயிலாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. தொடர்ந்து மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற 14-ந் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது. பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com