என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரவாசுதேவ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.
விஷ்ணு தீபத்தையொட்டி தருமபுரி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
- சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
- விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது.
தருமபுரி,
கார்த்திகை தீபத் திருவிழாவின் 2-வது நாளான நேற்று விஷ்ணு தீபத்தையொட்டி அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி அந்தந்த கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தருமபுரி நகரில் பிரசித்தி பெற்ற கோட்டை வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ பெருமாள் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் கோவில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதேபோல் குமார சாமிப்பேட்டை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் கோவில் வளாகத்தில் விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து நேற்று இரவு சாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது. மேள தாளத்துடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில், வரதகுப்பம் ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில், அதகபாடி லட்சுமி நாராயணசாமி கோவில், மணியம்பாடி ஸ்ரீ வெங்கட்ரமண சாமி கோவில், அக்கமனஅள்ளி ஸ்ரீ ஆதிமூல பெருமாள் கோவில், செட்டிக்கரை ஸ்ரீ பெருமாள் கோவில், அதியமான்கோட்டை சென்றாய பெருமாள் கோவில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோவில்களிலும் நேற்று விஷ்ணு தீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.






