search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பருத்தி விதைப்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு
    X

    கோகப்புபடம்

    பருத்தி விதைப்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

    • கடந்த 2017 ம் ஆண்டு வெளியிடப்பட்ட எஸ்விபிஆர்6 ரக பருத்தியானது நீண்ட இழைப் பருத்தியாகும்.
    • விதைகளைப் பெற்று பருத்தி சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் பலன் பெறலாம்.

    உடுமலை,

    பருத்தி சாகுபடி அதிகரிப்பதால் அதற்கான விதைத் தேவையும் அதிகரித்துள்ளது. இதனையடுத்து விதை உற்பத்தியின் மூலம் வருவாய் ஈட்டும் வாய்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

    இந்தநிலையில் பருத்தி அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் (சைமா) மூலம் உடுமலையையடுத்த சந்தனக்கருப்பனூர் விவசாயி ராஜேந்திரன் தோட்டத்தில் பருத்தி விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.இந்த விதைப்பண்ணையை திருப்பூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.அப்போது அவர் கூறியதாவது:- ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் கடந்த 2017 ம் ஆண்டு வெளியிடப்பட்ட எஸ்விபிஆர்6 ரக பருத்தியானது நீண்ட இழைப் பருத்தியாகும்.அதிக உற்பத்தித்திறன் கொண்ட இந்த ரகம் தமிழகத்தில் நீர்ப்பாசனம் உள்ள பகுதிகளில் கோடையில் சாகுபடி செய்வதற்கு ஏற்ற ரகமாகும். 155 நாட்கள் வாழ்நாள் கொண்ட இந்த ரகம் ஒரு ஏக்கருக்கு 1,357 கிலோ வரை மகசூல் தரக்கூடியது. மேலும் பாக்டீரியா, இலைக்கருகல் மற்றும் இலைப்புள்ளி நோய்களுக்கு அதிக எதிர்ப்புத் திறன் கொண்டது. தரமான சான்று பெற்ற விதைகளை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பருத்தி விதைப்பண்ணையில் பூப்பருவம், முதிர்ச்சிப்பருவம், அறுவடைக்குப் பிறகு என பல்வேறு கட்டங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. பிற ரகக் கலவன்கள் நீக்கப்பட்டு, வயல் தரத்தில் தேறும் தரமான விதைப் பருத்தி அறுவடை செய்யப்பட்டு அரசு அனுமதி பெற்ற விதை சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்படுகிறது. சுத்திகரிப்புப் பணி முடிந்ததும் அரசு அங்கீகாரம் பெற்ற ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டு முளைப்புத்திறன், ஈரப்பதம், சுத்தம் உள்ளிட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. விதைத் தரத்தில் தேறும் விதைகளுக்கு சான்றட்டை பொருத்தப்பட்டு, தரமான சான்று பெற்ற விதைகளாக விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.

    அந்த விதைகளைப் பெற்று பருத்தி சாகுபடி செய்வதன் மூலம் விவசாயிகள் பலன் பெறலாம். மேலும் விதைப்பண்ணைகள் அமைக்க விரும்பும் விவசாயிகள் அருகிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த ஆய்வின்போது விதைச்சான்று அலுவலர் ஷர்மிளா மற்றும் விவசாயிகள் உடனிருந்தனர்.

    Next Story
    ×