search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகேகன்னிமார் கோவில் சிலைகள் உடைப்புகிராம மக்கள் போராட்டம்
    X

    பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி

    சின்னசேலம் அருகேகன்னிமார் கோவில் சிலைகள் உடைப்புகிராம மக்கள் போராட்டம்

    கோவிலுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மாற்று சமூகத்தை சேர்ந்தவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பூசப்பாடி கிராம எல்லையில் உள்ள பஞ்சமி நிலத்தில் சேலம் மாவட்டம் ஊனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர் பொதுமக்கள் கன்னிமார் என்ற கோவிலை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.இந்த கோவிலுக்கு சொந்தமான பஞ்சமி நிலத்தை மாற்று சமூகத்தை சேர்ந்தவர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆதிதிராவிட பொதுமக்களுக்கும் மாற்று சமூகத்தை சேர்ந்தவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கடந்த 10 வருடங்களாக கோவிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்பந்தமாக ஆதிதிராவிட பொதுமக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து முறையாக அனுமதி பெற்று போலீஸ் பாதுகாப்புடன் கடந்த 8-ந் தேதி கோவிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் ஊனத்தூர் பகுதியைச் சேர்ந்த ஆதிதிராவிட கிராம மக்கள் பூசப்பாடி கிராம எல்லையில் உள்ள குலதெய்வமான கன்னிமார் கோவிலில் கிடா வெட்டி வழிபாடு செய்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். அப்பொழுது கோவிலில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டு, மரங்கள் அனைத்தும் வெட்டி சாய்த்த நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் இது சம்பந்தமாக போலீசாருக்கும், வருவாய் துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.கோவில் சிலையை உடைத்து சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று 100-க்கும் மேற்பட்டோர் கோவிலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யாவிட்டால் தீக்குளிக்க போவதாகவும் சாகும்வரை கோவிலில் இருந்து வெளியேற போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை அறிந்த கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் கிராம மக்களிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு இது சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதாகவும், தாசில்தாரை அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார்.

    தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.அப்போது இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காமல் இந்த இடத்தை விட்டு நகரம் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்ததால் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. இந்த பேச்சு வார்த்தையில் கோவிலுக்கு செல்ல பாதை ஏற்படுத்தி தருவதாகவும் கோவில் சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் கிராம மக்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

    Next Story
    ×