என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜேடர்பாளையம் தடுப்பணையில் குளித்த தொழிலாளியின் கதி என்ன?
- நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
- நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 15 பேருடன் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக வந்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மேட்டு தெருவை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 32).
இவர் நாமக்கல் பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரின் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
தடுப்பணையில் குளித்தார்
இந்த நிலையில் நேற்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு டாஸ்மாக் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் ஜெகநாதன் மற்றும் அவரது உறவினர்கள் 15 பேருடன் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக வந்தனர். அப்போது அனைவரும் குளித்துக் கொண்டிருந்தனர்.
ஜெகநாதன் ஆழமான பகுதியில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜெகநாதன் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் உடனடியாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் அப்பகுதி மீனவர்கள் உதவியுடன் பரிசல், படகு மூலமாக ஜெகநாதனை வெகு நேரமாக தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் இரவு நேரமாகி விட்டதால் தேடுதல் பணியை நிறுத்தினர்.
2-வது நாளாக...
இதையடுத்து 2-வது நாளாக இன்று காலை முதல் ஜேடர்பாளையம் காவிரி ஆற்றில் பரிசல், மீன்பிடி படகுகள் பயன்படுத்தி ஜெகநாதனை தீவிரமாக தேடி வருகின்றனர். ஆற்றில் மூழ்கிய அவரது கதி என்ன? என தெரியாமல் உறவினர்கள் ேசாகத்தில் மூழ்கியுள்ளனர்.
மேலும் இது குறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






