என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிந்தகம்பள்ளியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
- கரகத்தை கோவில் பூசாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றார்.
- கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த சிந்தகம்பள்ளி கிராமம் ஆந்திர மாநில எல்லையில் உள்ளது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் யுகாதி பண்டிகை விமரிசையாக கொண்டாடுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு திருவிழா கடந்த 22-ந் தேதி ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு வேப்பம் பத்திரி வெல்லம் வைக்கும் நிகழ்ச்சியும், இரவு தீச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சியும் நடந்தது.
விழாவில் நேற்று அதிகாலை முத்துமாரியம்மன் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மல்லிகைப்பூ மற்றும் வெள்ளியால் ஆன சிறிய குடைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட கரகத்தை கோவில் பூசாரி எடுத்து கொண்டு ஊர்வலமாக சென்றார்.
அப்போது கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் முன்பும் கரகத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர், பின்னர் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற அண்ணா நகரில் உள்ள காளிக்கோவில் அருகில் இருந்து முத்துமாரியம்மன் கோவில் வரை சாலையில் ஈரத்துணியுடன் படுத்து கொண்டனர்.
அவர்கள் மீது கரகம் எடுத்து வந்த பூசாரி நடந்து சென்றார். பின்னர் கோவில் எதிரில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் கரகத்துடன் பூசாரி இறங்கியவுடன், அவரை தொடர்ந்து பக்தர்கள் இறங்கினர்.
தொடர்ந்து பேய் விரட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற பக்தர்கள் தங்கள் கைகளை மேலே தூக்கி கொள்ள அந்த கைகள் மீது பூசாரி சாட்டையால் அடித்தார். மேலும் பக்தர்கள் ஆடு, கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.






