அரசியல் கட்சிகள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்போம்: பிரேமலதா விஜயகாந்த்

அரசியல் கட்சிகள் அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்போம். மதுரையில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார்.
மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணாவின் சிலைக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
Published on

மதுரை

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை முன்னிட்டு மதுரை நெல்பேட்டையில் உள்ள அண்ணாவின் திருவுருவ சிலைக்கு தே.மு.தி.க. சார்பில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இன்று தே.மு.தி.க. 19-வது ஆண்டு விழாவை முன்னிட்டு மதுரையில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளேன். அதனை தொடர்ந்து பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறோம். தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக கொடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து தற்போது உரிமைத் தொகை ஆயிரம் வழங்கியுள்ளது.

இது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தாலும், இந்த பணம் மக்களின் வரிப்பணம். அரசு இன்னும் செய்ய வேண்டிய வேலைகள் அதிகமாக இருக்கிறது. அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும். மதுரையில் பல சாலைகள் குண்டும் குழியுமாகவும், குப்பை கூழமாகவும் இருக்கிறது.

மேலும் இந்த உரிமை தொகை ஒரு திரைப்படத்தில் வரும் பாடல் போன்று. 'உன் பணம் பணம். என் பணம் பணம், உன் பணம் என் பணம்' என்ற நிலையில் தான் இருக்கிறது. மேலும் தேர்தல் வருவதையொட்டி தற்போது அரசியல் கட்சிகள் சனாதன பிரசாரத்தில் இறங்கி இருக்கிறது. மக்களிடம் சனாதனம் குறித்து எந்த பாகுபாடும் இல்லை. மக்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறார்கள், அரசியல் கட்சிகள் தான் தங்களுக்கு அரசியல் செய்ய வேண்டும் என்பதற்காக சனாதன பிரச்சனையை கையில் எடுக்கிறார்கள்.

இப்போது சனாதனத்தை பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன? இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் வருகிறது. இதனால் சனாதனத்தை கையில் எடுக்கிறார்கள். அனைத்து மதத்தினரும், அனைத்து ஜாதியினரும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் இருக்கிறார்கள். எனவே அரசியல் கட்சிகள் அடுத்த தேர்தலுக்கான அரசியலை கையில் எடுப்பதை விட்டுவிட்டு, அடுத்த தலைமுறைக்கான அரசியலை கையில் எடுத்தால் வரவேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தே.மு.தி.க. நிர்வாகிகள் பாலன், அழகர்சாமி, கணபதி, முத்துப்பட்டி மணிகண்டன், பாலச்சந்திரன், அரவிந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com