search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் நிரம்பி மறுகால் பாயும் சாத்தியாறு அணை
    X

    கீழச்சின்னம்பட்டியில் மாடுகளை கொண்டு உழவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

    தொடர் மழையால் நிரம்பி மறுகால் பாயும் சாத்தியாறு அணை

    • மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் சாத்தியாறு அணை நிரம்புகிறது.
    • 13 ஆண்டுகளுக்கு பின் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளது.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சாத்தியாறு அணை 29 அடி கொள்ளளவு கொண்டதாகும். இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான திண்டுக்கல் சிறுமலை, மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் இந்த அணைக்கு வருகிறது.

    கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போதிய பருவமழை இல்லாத காரணத்தால் அணை முழுவதுமாக வறண்டு காணப்பட்டது. இதனால் இந்த அணையின் மூலம் பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் முழுவதுமாக வறண்டு காணப்பட்டது.

    போதிய நீர் வசதியின்றி விவசாயிகள் கடும் வறட்சிக்கு உள்ளாகினர். இதனால் வைகை அணையில் இருந்து வெளியேறும் உபரி நீர் இந்த அணைக்கு ராட்சத பைப் மூலம் கொண்டு வந்து அணையை நிரப்ப வழிவகை செய்ய வேண்டும் என பாசன வசதி பெரும் விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    கடந்த 2 ஆண்டுகளாக அவ்வப்போது பெய்த பருவமழை காரணமாக அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் இருந்து ஓரளவு தண்ணீர் வந்த நிலையில் அணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்ந்தது. இதனால் இந்த அணையில் இருந்து பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் நிரம்பியது.

    இருப்பினும் தற்போது பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக கடந்த ஒரு மாதமாக அணை முழுவதுமாக நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்தும் அணைக்கு நீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் பாசன வசதி பெறும் 11 கிராம கண்மாய்களும் முழுவதுமாக நிரம்பி விவசாயப் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அனைத்து கிராம கண்மாய்களும் நிரம்பி கடந்த 20 நாட்களுக்கும் மேலாக அணையில் இருந்து வரும் தண்ணீர் மதுரை வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. பாசன வசதி பெறும் எர்ரம்பட்டி, கீழச்சின்னம்பட்டி முடுவார்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் 13 ஆண்டுகளுக்குப் பின் நெல் நடவு பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    வானம் பார்த்த பூமியாக இருந்த இப்பகுதி விவசாய நிலங்கள் தற்போது கண்ணுக்கு எட்டிய தூரம் வரையில் பச்சை ஆடை போர்த்தியபடி கண்கொள்ளாக் காட்சியாக உள்ளது.

    Next Story
    ×