search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கல்வி உதவித்தொகை தகுதி தேர்வை தமிழ் மொழியில் நடத்த கோரிக்கை
    X

    கல்வி உதவித்தொகை தகுதி தேர்வை தமிழ் மொழியில் நடத்த கோரிக்கை

    • மத்திய அரசின் கல்வி உதவித்தொகை தகுதி தேர்வை தமிழ் மொழியில் நடத்த வேண்டும் என வெங்கடேசன் எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளார்.
    • தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் கூறினார்.

    மதுரை

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசு கடந்த ஆண்டு கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா கல்வி உதவித் தொகைக்கான தகுதித் தேர்வை இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தியது. இதற்கு நான் எதிர்ப்பு தெரிவித்தேன்.

    இந்த நிலையில் மத்திய அரசு சென்னை ஐகோர்ட்டில் "அடுத்த ஆண்டு முதல் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் கேள்வித்தாள்கள் வழங்கப்படும்" என உறுதி அளித்தது. இப்போது அந்த திட்டமே இன்ஸ்பையர் சி திட்டத்தோடு இணைக்கப்பட்டு விட்டது.

    இந்த நிலையில் செயலூக்கம் உள்ள இந்தியாவின் இளைய சாதனையாளர்களுக்கான பிரதமர் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கான தகுதித் தேர்வு வருகிற 11-ந் தேதி நடக்கிறது. இது 9, 11-ம் வகுப்பு படிக்கும் இதர பிற்பட்டோர், சீர்மரபினருக்கான உதவித்தொகை திட்டம் ஆகும். இதற்கான கேள்வித்தாள்கள் இந்தி-ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    அடித்தள மாணவர்கள் பயன் பயன்பெறும் ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு, அதற்கு இந்தி- ஆங்கிலத்தில்தான் கேள்வித் தாள் தருவேன் என்பது என்ன நியாயம்?. கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் எப்படி இந்தி பேசும் மாநிலத்துடன் போட்டி போடுவார்கள்? இது அப்பட்டமான பாரபட்சம், அநீதி ஆகும்.

    இது தமிழ் இளைஞர்களின் வாழ்வு சம்பந்தப்பட்டது. தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் கேள்வித்தாள் வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங்குக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×