search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போலீசாரால் மீட்கப்பட்ட சிலைகள்; 2 பேரிடம் விசாரணை
    X

    மீட்கப்பட்ட சாமி சிலைகள்.

    போலீசாரால் மீட்கப்பட்ட சிலைகள்; 2 பேரிடம் விசாரணை

    • மதுரையில் சிலை கடத்தல் பிரிவு போலீசார் மீட்ட சிலைகள் எந்த கோவிலில் திருடப்பட்டது என 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
    • உலோகத்தால் செய்யப்பட்ட நாகலிங்கம் சிலை, திருவாச்சியுடன் கூடிய அம்மன் சிலை மற்றும் 2 பாவை விளக்குகளை பறிமுதல் செய்தனர்.

    மதுரை

    சென்னை-தஞ்சை நெடுஞ்சாலையில் சாமி சிலைகள் கடத்தப்படுவதாக மதுரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சிலை கடத்தல் மற்றும் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டுகள் ரவி, மலைச்சாமி ஆகியோர் உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு கதிரவன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது சிலை கடத்தும் கும்பல் ராம்நகர் பாலம் அருகில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் சிலை கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். இதில் 2 பேர் பிடிபட்டனர்.

    அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் உலோகத்தால் செய்யப்பட்ட நாகலிங்கம் சிலை, திருவாச்சியுடன் கூடிய அம்மன் சிலை மற்றும் 2 பாவை விளக்குகளை பறிமுதல் செய்தனர்.

    இதனைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் தாலுகா தேனாம்படுகை வடக்கு தெருவை சேர்ந்த குருசேவ் (வயது 42), கொரநாட்டு கருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பவுன்ராஜ் (36) என்பது தெரிய வந்தது.

    அவர்களுக்கு இந்த சிலை எப்படி கிடைத்தது? என்பது பற்றிய விவரங்கள் உடனடியாக கிடைக்க வில்லை.

    கடத்தல் கும்பலிடம் இருந்து மீட்கப்பட்ட சாமி சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது? மதுரை மாவட்டத்தில் உள்ள கோவிலில் இருந்து திருடப்பட்டதா? என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×