search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்த்து அ.தி.மு.க.வை வலுப்படுத்துவோம்- வைத்திலிங்கம் எம்.எல்.ஏ பேட்டி
    X

    ஆலோசனை கூட்டத்தில் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பேசினார்.

    பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்த்து அ.தி.மு.க.வை வலுப்படுத்துவோம்- வைத்திலிங்கம் எம்.எல்.ஏ பேட்டி

    • முப்பெரும் மாநாட்டில் மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும்.
    • அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக வரவே முடியாது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை தெற்கு, வடக்கு மாவட்ட அ.தி.மு.க (ஓ.பி.எஸ் அணி) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நடந்தது.

    மாவட்ட அவை தலைவர்கள் பூண்டி கிருஷ்ணன், ராஜரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். பேராவூரணி தொகுதி செயலாளர் நத்தியானந்தம், பட்டுக்கோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சிற்றரசு, கரந்தை பகுதி செயலாளர் அறிவுடைநம்பி, திருப்பனந்தாள் ஒன்றிய செயலாளர் யூனியன் வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கும்பகோணம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில் வரவேற்றார்.

    தொடர்ந்து வடக்கு மாவட்ட செயலாளர் எம்.ஜி.எம்.சுப்பிரமணியன் பேசினார்.

    இதையடுத்து தெற்கு மாவட்ட செயலாளரும் இணை ஒருங்கிணைப்–பாளருமான ஆர்.வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

    அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது பொது செயலாளரை தொண்டர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சட்ட விதியை கொண்டு வந்தார். அதை யாராலும் மாற்ற முடியாது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் பொதுசெயலாளர் ஜெயலலிதா தான் என்பதால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இன்று கட்சி பேராசைகாரர்கள் கையில் போய்விட்டது.

    திருச்சியில் நடக்க உள்ள முப்பெரும் மாநாட்டில் தஞ்சை மாவட்டத்தில் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதா தான். வேறு யாரையும் ஏற்பதில்லை. எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து இருக்கும் பொது செயலாளர் தேர்தலை வன்மையாக கண்டிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், பொருளாளர் ராஜா, திருச்சி மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் வினுபாலன், பகுதி செயலாளர்கள் ரமேஷ் , சண்முகபிரபு, சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் நாஞ்சி வ.சத்தியராஜ், திருவையாறு தெற்கு ஒன்றிய செயலாளர் நீலமேகம், முன்னாள் துணை மேயர் மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் துரை.வீரணன், பாவா என்ற ராமசந்திரன், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட செயலாளர் குழந்தைசாமி, கவுன்சிலர் சரவணன், மகளிரணி செயலாளர்கள் அமுதாரவிச்சந்திரன், அனுசியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோட்டை பகுதி செயலாளர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

    பின்னர் வைத்தி லிங்கம் எம்.எல்.ஏ. அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    அ.தி.மு.க.வுடன் வருகிற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி கிடையாது என்று அண்ணாமலை கூறிய கருத்து அவரது கருத்து தான். பா.ஜ.க.வின் மேலிட தலைவர்கள் கருத்து கூறவில்லை. இதற்கு நான் பதில் கூற வேண்டியதில்லை.

    தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளராக இன்னமும் ஓ.பன்னீர்செல்வமே உள்ளார். எனவே எங்களுக்கு வெற்றி கிடைக்கும் என நம்புகிறோம்.

    டி.டி.வி.தினகரன், சசிகலா என யாராக இருந்தாலும் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் ஒன்று சேர்த்து அ.தி.மு.க.வை வலுப்படுத்துவோம்.

    அ.தி.மு.க. பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமி நிச்சயமாக வரவே முடியாது. பொதுசெயலாளர் தேர்தல் என்பது முறைப்படி அறிவிக்க வேண்டும். ஆனால் எதுவும் முறைப்படி நடைபெறவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×