search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குலசை தசரா திருவிழா: சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் பக்தர்
    X

    குழிக்குள் இருந்து வெளியே வந்த சந்திரன்.

    குலசை தசரா திருவிழா: சுடுகாட்டில் 6 அடி குழி தோண்டி குழிக்குள் விரதம் இருக்கும் பக்தர்

    • 26-ந்தேதி முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • தீராத புற்றுநோய் குணமாகியதால் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. முத்தாரம்மனை வழிபட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சங்கனாங்குளம் ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரன் (வயது46). இவர் சுமார் 35 ஆண்டுகளாக விதவிதமான வேடமணிந்து அம்மனை தரிசித்து வருகிறார்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு தொண்டை பகுதியில் கேன்சர் ஏற்பட்டு சிகிச்சைக்கு உள்ளானார். சிகிச்சையில் முன்னேற்றம் கிடைக்கப்பெறாத நிலையில் அம்மனை மனம் உருகி வழிபட்டு வந்தார். அதன் பலனாக அவருக்கு ஏற்பட்ட கேன்சர் நோயின் பாதிப்பு வெகுவாக குறைய தொடங்கியது.

    அதற்கு அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் விதமாக 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடம் அணிந்து விரதம் இருந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகிறார்.

    இந்த ஆண்டு வருகிற 26-ந்தேதி முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி பக்தர் சந்திரன் சங்கனாங்குளத்தில் உள்ள சுடுகாட்டில் 6 அடி அளவில் நீளமான பள்ளம் தோண்டி குடில் அமைத்து 21 நாட்கள் விரதம் இருந்து வருகிறார்.

    விரதத்தை முன்னிட்டு சுடுகாட்டு காளி வேடம் அணிந்து நேர்த்திக்கடன் செலுத்தும் விதமாக விரதத்தை கடைபிடித்து வருகிறார். உணவு எதுவும், உட்கொள்ளாமல் காலை மாலை வேளைகளில் பால் கலக்காத காபியும் மற்ற வேளைகளில் தண்ணீர் மட்டும் குடித்து விரதம் கடைபிடிக்கிறார். இருவேளை பூஜை நடத்தும் இவர் பூஜைக்கு முன்னதாக குளிப்பதற்காக மட்டுமே வெளியே வருகிறார்.

    பகல்- இரவு வேளைகளில் வெளியே வருவதில்லை. தொடர்ச்சியாக அம்மனின் அருள் கிடைத்ததாக கூறும் சந்திரனுக்கு ஏற்பட்ட கேன்சர் நோய் தற்போது மருத்துவ சிகிச்சை இன்றி முற்றிலும் குணமடைந்து இருப்பதாக கூறுகிறார்.

    இது குறித்து சுடுகாட்டு காளி சந்திரன் கூறியதாவது:-

    எனக்கு வந்த தீராத நோய் கேன்சர் என்னை மரண வாசலில் கொண்டு போய் விட்டது. அந்த நேரத்தில் மருத்துவர்களும் உறவினர்களும் என்னை கைவிட்ட நேரத்தில் என்னை காப்பாற்றியது குலசை முத்தாரம்மன் தான். நான் 35 ஆண்டுகளாக குலசை முத்தாரம்மனின் பக்தர் தான். ஆனால் நான் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட போது முத்தாரம்மன்னை மட்டுமே நம்பி இருந்தேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை.

    அதனால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்து விட்டதாக நினைத்து சுடுகாடு வரை சென்று உயிருடன் திரும்பியதால் முத்தாரம்மனின் ஒரு அவதாரமான சுடுகாட்டு காளி ஆகவே நான் கடந்த 4 ஆண்டுகளாக சுடுகாட்டு காளி வேடமணிந்து 21 நாட்கள் அன்ன ஆகாரம் உண்ணாமல் சுடுகாட்டில் உடல் அடக்கம் செய்ய தோண்டப்படும் குழி போன்று குழி தோண்டி அந்த குழியில் தங்கி இரவு பகல் வசித்து வருகிறேன் என்று கூறினார்.

    Next Story
    ×