search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மனநலம் பாதித்த வாலிபருக்கு மறுவாழ்வு அளித்த போலீசார்
    X

    மனநலம் பாதித்த வாலிபருக்கு மறுவாழ்வு அளித்த போலீசார்

    • மனநலம் பாதித்த வாலிபரை போலீசாரும், மனித நேயத்தினரும் மீட்டு மறு வாழ்வு
    • பலரது கூட்டு முயற்சியால் மீட்கப்பட்டு சிகிச்சை

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம், புகழூர் வட்டம், திருக்காடுதுறை ஊராட்சி, பூலாங்காலனி, ஆலமரத்துமேடு பகுதியில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் சுற்றித்திரிந்தார். காலில் அடிபட்டு நடக்க இயலாமல் சாலையில் வாகனங்களுக்கு இடையூறாகவும், உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழலிலும் அவர் சுற்றியுள்ளார்.அவரை உடனடியாக மீட்க வேண்டும் என்று சாந்திவனம் மனநலக் காப்பகம் இயக்குநர் அரசப்பனுக்கு கரூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலிருந்து தகவல் வந்தது.இதை தொடர்ந்து சாந்திவனம் மனநல காப்பகம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் நந்த கோபால், ஏட்டு சுமித்ரா ஆகியோர் அங்கு சென்றனர்.இதனிடையே திருக்காடுதுறை கிராம நிர்வாக அலுவலர் ரவி அந்த நபரை மீட்டு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அங்கு காலில் இருந்த புண்ணிற்கு கட்டுப்போட்டுவிட்டு கரூர் வெண்ணமலையிலுள்ள கரூர் அன்புக் கரங்கள் - சிறார் மற்றும் முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தார்.

    இதை அறிந்த சாந்திவனம் ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், நிர்வாக செயலாளர் டாக்டர் ராமகிருஷ்ணன், மனநல மருத்துவர் டாக்டர் அருன்குமார் மற்றும் சாந்திவனம் இயக்குநர் அரசப்பன் ஆகியோர் மூலமாக கரூர் வெண்ணமலை சென்று அந்த நபரை மீட்டனர்.மீட்புக் குழுவில் செவிலியர் சித்ரா, அருள்குமார் ஆகியோரும் இடம்பெற்றனர். அவரை திருச்சி, தில்லைநகரிலுள்ள ஆத்மா மனநல மருத்துவமனையில் மனநல சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு ஆத்மா மனநல மருத்துவர் அஜய் தலைமையிலான குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். பாதிக்கப்பட்ட நபர் கால் கீழ்பகுதி முழுவதும் புண் அதிகமாகி காலே அழுகும் சூழலில் இருந்தது. இன்னும் சிறிது நாள் சென்றிருந்தால் அந்தக் காலையே எடுக்கும் சூழல் வந்திருக்கும்.அந்தளவுக்கு கால் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அதனை ஆத்மா மனநல மருத்துவமனை செவிலியர்கள் சுத்தப்படுத்தி மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்தளித்துள்ளனர், அதே நேரம் மனநல சிகிச்சையும் தொடங்கப்பட்டு உள்ளது.பலரது கூட்டு முயற்சியால் ஒரு உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. மனித நேயம் இன்னும் மரித்துப்போகவில்லை என்பதை உணர்த்தும் விதமான இந்த நிகழ்வு மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மீட்பு பணியில் ஈடுபட்ட வி.ஏ.ஓ., மனநல காப்பகத்தினர், போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.

    Next Story
    ×