search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு
    X

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் விழா முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்
    • தடாகோவில் பகுதியில் நாளை நடைபெறுகிறது

    கரூர்:

    கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள தடாகோவிலில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தை நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதனையடுத்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பந்தல், மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி கடந்த 20 ஆண்டுகளாக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்த விவசாயிகளுக்கு முதல் கட்டமாக ஆட்சிப்பொறுப்பேற்ற 6 மாதத்திற்குள் ஒரு லட்சம் இலவச மின்இணைப்பு வழங்கப்பட்டது. தற்போது 2-வது கட்டமாக கரூர் மாவட்டத்தில் நாளை (11-ந்தேதி, வெள்ளிக்கிழமை) மின்சாரத்துறை சார்பில் நடைபெற உள்ள விழாவில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரம் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற உள்ளனர். அடுத்த கட்டமாக மீதமுள்ள விவசாய பெருமக்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும். மேலும், கரூர் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரக்கூடிய விவசாய பெருமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது, கலெக்டர் பிரபுசங்கர், எம்.எல்.ஏ.கள் இளங்கோ, சிவகாமசுந்தரி, மாணிக்கம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சச்சிதானந்தம் மற்றும் பலர் உடனிருந்தனர்.


    Next Story
    ×