search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச விழா
    X

    கபிலர்மலை பாலசுப்பிரமணியசுவாமி கோவிலில் கொடியேற்றம் நடைபெற்ற போது எடுத்த படம்.

    கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் தைப்பூச விழா

    • கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தேர்த் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலையில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சாமி திருக்கோவிலில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், வருகின்ற 5-ந் தேதி தைப்பூசத் திருநாளில் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி, தீர்த்தக் காவடி, பால் காவடி, இளநீர் காவடி, மயில் காவடிகளை மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்து வந்து வழிபாடு செய்வார்கள்.

    மேலும் அன்று மாலை முக்கிய நிகழ்வான தேர்த் திருவிழாவில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

    இதன்படி, இன்று காலை கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிவாச்சாரியார்கள் மூலம் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள நாதஸ்வர வாத்தியங்கள் ஒலிக்க கொடியேற்று விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கொடியேற்றத்தின் போது அரோகரா அரோகரா என்று கோஷங்கள் எழுப்பினர். பின்னர் கொடி மரத்திற்கும், மூலவர் முருகப்பெருமானுக்கும் உற்சவமூர்த்தி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    மேலும் தைப்பூசத்தையொட்டி தொடர்ந்து 9 நாட்களும், தினமும் இரவு உற்சவமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் அலங்காரம் செய்யப்பட்டு யானை வாகனம், சிம்ம வாகனம், குதிரை வாகனம், அன்னப்பச்சி வாகனம், காமதேனு வாகனம் ஆகிய வாகனங்கள் மூலம் திருவீதி உலா நடைபெறும் என்று சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×