search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிற்றார் 2-ல் 90 மில்லி மீட்டர் மழை பேச்சிப்பாறை அணை 44 அடியை கடந்தது
    X

    சிற்றார் 2-ல் 90 மில்லி மீட்டர் மழை பேச்சிப்பாறை அணை 44 அடியை கடந்தது

    • கரையோர பகுதி மக்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை
    • இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் குளுகுளு சீசன் நிலவுகிறது. தினமும் காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் மாலையில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. நேற்று மாலையில் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இரவு கனமழை கொட்டி தீர்த்தது. அதிகப்பட்சமாக சிற்றார் 2-ல் 90 மில்லி மீட்டர் மழை பெய்தது. நாகர்கோவிலில் நேற்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை கனமழை பெய்தது. இன்று காலையில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது. மழையில் இருந்து தப்பிக்க பள்ளி சென்ற மாணவ-மாணவிகள் குடைபிடித்தவாறு சென்றனர்.

    பூதப்பாண்டி, கன்னிமார், குழித்துறை, மயிலாடி, கொட்டாரம், இரணியல் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் கன மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியிலும், மலையோரப்பகுதியான பாலமோர் பகுதியிலும் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    சிற்றாறு-1 அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் நிறுத்தப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணை கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று அணையிலிருந்து தண்ணீர் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அணை நிரம்பிவருவதையடுத்து எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படலாம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோதை ஆற்றில் திறந்து விடப்படும் தண்ணீர்களியல், திற்பரப்பு, மூவாற்றுமுகம், குழித்துறை வழியாக தேங்காய்பட்டினம் கடலில் சென்று சேரும். எனவே கோதையாறு தாமிரபரணி ஆற்றின் கரையோர பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது.

    அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டிவருவதால் இன்றும் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 44.14 அடியாக இருந்தது. அணைக்கு 468 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 328 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 72.18 அடியாக உள்ளது. அணைக்கு 674 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 650 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன. தொடர் மழைக்கு அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 4 வீடுகளும் தோவாளை தாலுகாவில் ஒரு வீடும் இடிந்து விழுந்துள்ளது.

    தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் பழையாறு, வள்ளியாறு, கோதை ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பாசன குளங்களும் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் குளங்களில் உடைப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் முன்னேற்பாடு பணிகளை பொதுப்ப ணித்துறை அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிப்பாறை 6.6, பெருஞ்சாணி 10.2, சிற்றாறு 1-8.6, சிற்றார் 2-90, பூதப்பாண்டி 19.2, களியல் 60, கன்னிமார் 19.2, கொட்டாரம் 4, குழித்துறை 80, நாகர்கோவில் 12.4, சுருளோடு 10, தக்கலை 32, குளச்சல் 6, இரணியல் 15, பாலமோர் 5.2, மாம்பழத்துறையாறு 29, திற்பரப்பு 17.3, கோழிப்போர்விளை 12.6, அடையாமடை 18.1, குருந்தன்கோடு 16.4, முள்ளங்கினாவிளை 3.4, ஆணைக்கிடங்கு 28.4, முக்கடல் 7.4.

    Next Story
    ×