search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரம்ஜான் பண்டிகை-தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    ரம்ஜான் பண்டிகை-தொடர் விடுமுறையையொட்டி கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • கடல் சீற்றம் காரணமாக படகு போக்குவரத்து 2 மணி நேரம் நிறுத்தம்
    • 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு எப்போதும் சுற்றுலா பயணிகள் வந்து பல்வேறு இடங்களை பார்த்து மகிழ்வதுண்டு. அதுவும் விடுமுறை நாட்களில் இங்கு கூட்டம் அதிகமாக காணப்படும். அதன்படி ரம்ஜான் மற்றும் தொடர் விடுமுறை காலம் என்பதால் இன்று கன்னி யாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் இன்று அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தனர்.

    அதன் பிறகு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் ஆனந்த குளியல் போட்டனர். தொடர்ந்து கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

    ஆனால் கடல் சீற்றம் அதிகமாக இருந்ததால் படகு போக்குவரத்து திட்டமிட்டபடி தொடங்கப்பட வில்லை. 2 மணி நேரம் தாமதத்திற்கு பிறகு காலை 10 மணிக்கு தான் படகு போக்குவரத்துத்து தொடங்கப்பட்டது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் படகில் ஆர்வத்டன் பயணம் செய்து விவேகானந்தர்மண்டபம், திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப்பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட்பாயிண்ட் கடற்கரை பகுதி, கலங்கரை விளக்கம், மியூசியம், அரசு அருங்காட்சியகம், மீன் காட்சி சாலை, அரசு பழத்தோட்டம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களிலும் இன்று காலையில் இருந்தே சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதனால் அனைத்து இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கடற்கரைப் பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    இன்று ரம்ஜான் பண்டிகையையொட்டி கன்னியாகுமரியில் உள்ள முஸ்லிம் பள்ளி வாசல்களிலும் தொழுகை நடத்த ஏராளமானோர் திரண்டனர்.

    இதற்கிடையில் கடல் சீற்றம் மற்றும் வானிலை மாற்றம் காரணமாக கன்னியாகுமரி, சின்ன முட்டம், ஆரோக்கியபுரம், வாவத்துறை, கோவளம், கீழமணக் குடி, மணக்குடி ஆகிய கடற்கரை கிராமங்களைச்சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நூற்றுக்க ணக்கான கட்டுமரம் மற்றும் வள்ளங்கள் கடற்கரையில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதனால் கடற்கரை கிராமங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. மீன்வரத்து இல்லாததால் மீன் சந்தைகளும் களை இழந்து காணப்பட்டன.

    Next Story
    ×