search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கன்னியாகுமரியில் இன்று 5-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு
    X

    கன்னியாகுமரியில் இன்று 5-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வு

    • 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது
    • சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடலில் சுனாமிக்கு பிறகு அடிக்கடி கடல் உள்வாங்குவது, கடல் நீர்மட்டம் தாழ்வது, உயர்வது, கடல் சீற்றம், கடல்கொந்தளிப்பு, ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வீசுவது, அலையே இல்லாமல் கடல் அமைதியாக குளம்போல் காட்சியளிப்பது போன்ற பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன.

    குறிப்பாக அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் இந்த இயற்கை மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் அமாவாசையையொட்டி கடந்த 16-ந்தேதி காலையில் கன்னியாகுமரியில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள் வாங்கி காணப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன்பிறகு நேற்று வரை 4 நாட்களாக தொடர்ந்து காலையில் கடல் நீர்மட்டம் தாழ்ந்து உள்வாங்கி காணப்பட்டது. காலை 10 மணிக்கு கடல் சகஜநிலைக்கு திரும்பியதை தொடர்ந்து 2 மணி நேரம் தாமதமாக 10 மணிக்கு பிறகு படகு போக்குவரத்து தொடங்கியது.

    வழக்கம்போல் இன்று 5-வது நாளாக கடல் நீர்மட்டம் தாழ்வாக காணப்பட்டது. கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள வங்ககடல் பகுதி நீர்மட்டம் தாழ்ந்து காணப்பட்டது. அதேவேளையில் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதியில் கடல்கொந்தளிப்புடனும், சீற்றமாகமாகவும் காணப்பட்டது.

    இதனால் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இன்று காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதனால் படகுத்துறை நுழைவுவாயிலில் காத்திருந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதற்கிடையில் காலை 11 மணிக்கு கடல் சகஜ நிலைக்கு திரும்பியது. இதைத்தொடர்ந்து 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்து தொடங்கியது. அதன் பிறகு சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று ஆர்வமுடன் பார்த்து வந்தனர். மேலும் கன்னியாகுமரி, சின்னமுட்டம், வாவத்துறை, கோவளம், கீழமணக்குடி, மணக்குடி போன்ற கடற்கரை கிராமங்களில் கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் இந்த கடற்கரை கிராமங்களில் சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் எழும்பி வீசின. இதனால் இன்று காலை கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி நடத்தப்படவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

    Next Story
    ×