என் மலர்
உள்ளூர் செய்திகள்

மருந்தக ஊழியர் கொலை
- கைதான பேராசிரியை ஜெயிலில் அடைப்பு
- சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திகுத்து
கன்னியாகுமரி:
நாகர்கோவில் வடசேரி பகுதியைச் சேர்ந்தவர் ரதீஷ்குமார் (வயது 35) இ.எஸ்.ஐ மருந்தக ஊழியர்.
இவர் ஆரல்வாய் மொழியில் உள்ள இ.எஸ்ஐ மருத்துவமனையில் பணியில் இருந்த போது அங்கு சென்ற மனவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த பேராசிரியை ஷீபா (37) என்பவர் ரதீஷ் குமாரை சரமாரியாக குத்தி கொலை செய்தார். சுமார் 30க்கும் மேற்பட்ட இடங்களில் கத்திகுத்து விழுந்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஆரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கடந்த ரதீஷ் குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை வழக்கு தொடர்பாக ஷீபாவை போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட ஷீபா போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
எனக்கும் ரதீஷ் குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ரதீஷ்குமார் என்னை திருமணம் செய்வதாக கூறினார். இந்த நிலையில் எனது கணவருடன் எனக்கு விவாகரத்து ஏற்பட்டது.பின்னர் சில நாட்கள் கழித்து ரதிஷ்குமார் என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். கடந்த ஆண்டு அவர் கீர்த்திகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு என்னை புறக்கணித்தார்.
இதனால் ஏற்கனவே இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றேன்.இந்த நிலையில் நேற்று முன்தினம் எனது பிறந்த நாளாகும். இதையடுத்து ரதீஷ்குமாரை சந்திக்க வேண்டும் என்று கூறினேன். அவர் என்னிடம் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாயா என்று கேட்டார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் அவரை தீர்த்துகட்ட முடிவு செய்தேன். சம்பவத்தன்று ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு வாங்கிக் கொண்டு அதில் தூக்க மாத்திரை கலந்தேன்.
பின்னர் சி.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சென்றேன். அங்கிருந்த ரதீஷ்குமாரிடம் சிறிது நேரம் பேசி க்கொண்டி ருந்தேன்.பின்னர் நான் வாங்கிக் கொண்டு சென்ற உணவை ரதீஷ் குமாருக்கு கொடுத்தேன்.சிறிது நேரத்தில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. பின்னர் அவரைஆத்திரம் தீரும்வரை சரமாரியாக குத்தி கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஷீபாவை போலீசார் பூதப்பாண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 27-ந் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.இதை அடுத்து ஷீபா தக்கலை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.