search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொட்டாரம் பகுதியில் கால்வாயை தூர்வாரி குப்பைகளை சாலையோரத்திலேயே கொட்டிய அவலம்
    X

    கொட்டாரம் பகுதியில் கால்வாயை தூர்வாரி குப்பைகளை சாலையோரத்திலேயே கொட்டிய அவலம்

    • துர்நாற்றம் வீசுவதால் அகற்ற கோரிக்கை
    • என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டத்தில் இரண்டாம் போக சாகுபடியான கும்பப்பூ சாகுபடி முடிந்து அறுவடைகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மூடப்பட்டன. இதைத்தொடர்ந்து இந்த அணைகளில் இருந்து பாசனத்துக்காக கால்வாய்களில் தண்ணீர் திறந்து விடப்படுவது நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த 2 மாதங்களாக கொளுத்திய வெயிலினால் ஆறு, கால்வாய், குளங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடந்தன.

    இந்த நிலையில் முதல் போக கன்னிப்பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை ஜூன் மாதம் 1-ந்தேதி திறக்கப்பட்டது. ஆனால் புத்தனாறு கால்வாய் தூர்வாரப்படாமல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கழிவுகள் தேங்கி ஆங்காங்கே தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.

    இதைத்தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள மிக நீளமான கால்வாயான நாஞ்சில் நாடு புத்தனாறு கால்வாய் எனப்படும் என்.பி. கால்வாய் ரூ.25 லட்சம் செலவில் தூர்வாரி சீரமைக்கும் பணி நடந்தது.

    இந்த கால்வாய் தொடங்கும் சீதப்பால் அருகே உள்ள சாட்டுப்புதூர் பகுதியில் இருந்து கொட்டாரம் பகுதியில் உள்ள மேட்டுக்கால் மற்றும் பள்ளக்கால் பகுதி வரை 24 கிலோ மீட்டர் 560 மீட்டர் தூரம் வரை கால்வாயின் இருபுறமும் வளர்ந்துள்ள செடி, கொடிகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி நடந்தது. ராட்சத ஜே.சி.பி. எந்திரம் மூலம் இந்த கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது.

    இதில் கொட்டாரம் முதல் பொற்றையடி வரை உள்ள பகுதியில் உள்ள என்.பி. கால்வாயில் தூர்வாரப்பட்ட குப்பைகள், கழிவுகள் மற்றும் சகதியை நாகர்கோவில்-கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையோரமாக ஆங்காங்கே கொட்டி வைத்துள்ளனர்.

    இந்த குப்பைகள் கொட்டப்பட்டு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமின்றி போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது.

    மேலும் இந்த குப்பை கூழங்களால் விபத்துக்கள் ஏற்பட்டு ஆற்றில் வாகனங்கள் கவிழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மழை பெய்தால் சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டுள்ள குப்பை கூழங்கள் மீண்டும் கால்வாயிலேயே விழும் நிலை உள்ளது.

    எனவே தூர்வாரி ரோட்டோரத்தில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அங்கிருந்து அகற்ற பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பை சேர்ந்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×